லே-லடாக் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது 26 நாட்கள் நீடித்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நள்ளிரவில் முடித்துக்கொண்டார். டெல்லியில் உள்ள மேடான்டா மருத்துவமனையில் மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆகியோர் அவரை நேரில் சந்தித்து, அரசின் உறுதியான வாக்குறுதிகளை தெரிவித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதாக வாங்சுக் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். “மத்திய அமைச்சர்கள், லே-லடாக் அபெக்ஸ் பாடி அமைப்பின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் நான் எனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டேன்” என்று அவர் குறிப்பிட்டார். இந்தப் போராட்டம் ஜூன் 20 அன்று ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (CJP) தலைமையில் தொடங்கியது. ஜூன் 28 அன்று வாங்சுக் இதில் இணைந்தார். தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்புக்கூறல், கல்வி முறையில் மாற்றங்கள் மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை அவர் முன்வைத்திருந்தார்.
அமைச்சர் ஜே.பி. நட்டா, மருத்துவமனையில் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ உள்ளிட்டோர் முன்னிலையில் அரசின் உறுதிமொழிகளை வாசித்துக் காட்டினார். ஜந்தர் மந்தரில் அமைதியாக போராடியவர்கள் மற்றும் ஜூலை 20ம் தேதி அன்று நாடாளுமன்ற நோக்கிய பேரணியில் பங்கேற்றவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்பட மாட்டாது என்று அரசு சாதகமான நிலைப்பாட்டில் உள்ளது. மேலும், தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வி சீர்திருத்தங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்படும். சமீபத்திய NEET தேர்வு கசிவு விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்குவது குறித்தும் அரசு சாதகமாக பரிசீலித்து வருகிறது என்று நட்டா தெரிவித்தார்.
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, “சோனம் ஜி மருத்துவர்களின் அறிவுரைப்படி ஓய்வெடுத்து, உடல் எடையை மீட்டெடுக்க வேண்டும். அவர் ஆரோக்கியமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்” என்று வாழ்த்து தெரிவித்தார்.
வாங்சுக் தனது பதிவில், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னை நேரில் அல்லது கடிதம் மூலம் சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வலியுறுத்தியதாகக் கூறினார். நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, நாட்டில் வன்முறை ஏற்படக்கூடிய சூழலைத் தவிர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் விளக்கினார். “எங்கும் வன்முறை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்த அவர், நிபந்தனைகள் குறித்த விவரங்களை விரைவில் ஒரு தனி காணொளி மூலம் தெரிவிப்பதாக உறுதியளித்தார்.
லடாக்கின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கல்வி மேம்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளில் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சோனம் வாங்சுக், இந்தப் போராட்டத்தின் மூலம் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான கவலைகளை தேசிய அளவில் எடுத்துச் சென்றுள்ளார். அரசின் உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் அவர் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றுள்ள நிலையில், இந்த விவகாரம் இனி நாடாளுமன்ற விவாதத்தின் மூலம் முன்னேற்றம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
