தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்த நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசை கவிழ்க்க சதி நடைபெற்றதாகக் கூறப்படும் பரபரப்பு விவகாரம் தொடர்ந்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜாவை அணுகி, சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு தருவதற்காக ரூ.35 கோடி பணம் தருவதாக சிலர் பேரம் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து இளையராஜா எம்.எல்.ஏ. சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சதியில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமார் ஆகியோர் தொடர்புபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. கைது செய்யப்பட்டவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அசோக் குமார் மீது தனியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருவருக்கும் திருவல்லிக்கேணி போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். கடந்த 8-ம் தேதி நீதிமன்றம் இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கியது. முன்ஜாமீன் உத்தரவு நகல் கிடைத்த 15 நாட்களுக்குள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் எனவும், ரூ.25,000 சொந்த ஜாமீன் மற்றும் அதே தொகைக்கு இரு நபர் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டது. மேலும், மறு உத்தரவு வரும் வரை தினசரி காலை 10.30 மணிக்கும் மாலை 5.30 மணிக்கும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இதன்படி, நேற்று இருவரும் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றனர். இன்று காலை 10.30 மணியளவில் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜரான அவர்கள், விசாரணை அதிகாரி முன்பு முதல் நாள் கையெழுத்திட்டனர். அவர்களுடன் வழக்கறிஞர்கள் குழுவும் உடன் இருந்ததால் போலீஸ் நிலையம் பரபரப்பாகக் காட்சியளித்தது.
உயர் நீதிமன்ற உத்தரவின்படி, வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், தலைமறைவாகக் கூடாது, ஆதாரங்கள் அல்லது சாட்சிகளை சிதைக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்று செந்தில் பாலாஜியிடம் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்ததும் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்காமல், “பின்னர் பேசுகிறேன்” எனக் கூறிவிட்டு அவர் அங்கிருந்து சென்றார். இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
