தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் மரிய வில்சன் சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பட்ஜெட் உரையை வாசித்தார். பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதி ஒன்று பற்றிய அறிவிப்பு வரவில்லை.
தவெக ஆட்சிக்கு வந்தால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டிருந்தது. திருமணமான 60 வயதுக்குட்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என்ற அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. ஆட்சி அமைந்த பிறகும் இந்த உயர்வு செயல்படுத்தப்படவில்லை.
தொடர்ந்து ரூ.1,000 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. திட்டத்தின் பெயரையும் ‘மதிப்புமிகு மகளிர் திட்டம்’ என மாற்றினர். இன்று பட்ஜெட்டில் இந்த உயர்வு அறிவிக்கப்படுமா என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் கடைசி வரை அத்தகைய அறிவிப்பு வெளியாகவில்லை. தற்போது மாநிலத்தில் சுமார் 1.30 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதற்காக ஆண்டுக்கு சுமார் ரூ.15,600 கோடி செலவாகிறது.
ரூ.2,500 ஆக உயர்த்தினால் செலவு இரட்டிப்பாகும். மாநிலத்தின் மொத்த கடன் ரூ.13.18 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளதாக வெள்ளை அறிக்கை தெரிவித்தது. நிதி நெருக்கடி காரணமாகவே இந்த உயர்வு தள்ளிப்போடப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது.
பட்ஜெட்டில் தங்கம் மற்றும் பட்டுச் சேலை திட்டம், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம், மாணவர்களுக்கு மடிக்கணினி உள்ளிட்ட பல நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
எனினும் மகளிர் உரிமைத் தொகை உயர்வு குறித்த எந்தக் குறிப்பும் இல்லாததால், வரும் மாதங்களிலும் பெண்களுக்கு ரூ.1,000 மட்டுமே கிடைக்கும் என்ற நிலை தொடர்கிறது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் நேரம் எப்போது என்பது அடுத்தடுத்த அறிவிப்புகளைப் பொறுத்தே இருக்கும்.
