இடுக்கி மாவட்டத்தில் “ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, தேக்கடி, வாகமண், மூணாறு உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், தேக்கடி ஏரியில் படகு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலா தலங்கள் மூடல்:
தமிழக-கேரள எல்லையை இணைக்கும் இடுக்கி மாவட்டத்தில் இன்று அதிதீவிர கனமழைக்கான “ரெட் அலர்ட்” எச்சரிக்கையை திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இந்த முன்னறிவிப்பிற்கு ஏற்ப தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இடுக்கி மாவட்ட ஆட்சியர் விக்னேஷ்வரி உத்தரவுப்படி, தேக்கடி, வாகமண், மூணாறு உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன. காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், தேக்கடி ஏரியில் படகு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளுக்கு அறிவிப்பு:
கோடை விடுமுறையின் இறுதிக் காலம் என்பதால், இடுக்கி சுற்றுலா தலங்களுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். எனினும், மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டிருக்கும் என்றும், சுற்றுலா பயணிகளுக்கான அனைத்து மகிழ்விப்புத் திட்டங்களும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் விக்னேஷ்வரி தெரிவித்துள்ளார்.