கேரளாவில், 102 வயது மூதாட்டி ஒருவர், மூன்றாவது முறையாக சபரிமலை 18 படிகளில் ஏறிச்சென்று அய்யப்ப சுவாமியை தரிசித்தார்.

கேரள மாநிலம், வயநாடு, மீனங்காடி பகுதியைச் சேர்ந்த பாருக்குட்டி, 2023-ல் நுாறாவது வயதை கொண்டாடினார். அப்போது அவருடைய பேரன்களில் ஒருவர் சபரிமலைக்கு அழைத்துள்ளார். வாழ்வில் ஒருமுறை கூட சபரிமலை போகாத இவர், பேரனின் அழைப்பை ஏற்றுக்கொண்டு மாலையிட்டு விரதமிருந்து முதல் முறையாக சபரிமலை சென்றார்.

கடந்த ஆண்டு இரண்டாவது முறையாக வந்த பாருக்குட்டி, இந்தாண்டு மூன்றாவது முறையாக அய்யப்பனை தரிசிக்க நேற்று சபரிமலை வந்தார். பேரன்கள் மற்றும் உறவினர்கள் உட்பட 12 பேர் அவர் வந்த குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

102 வயதில் ஏற்பட்டுள்ள உடல் தளர்ச்சியால் இவர், பம்பையில் இருந்து டோலியில் வந்தார். பின், அங்கு பணியில் உள்ள போலீசாரின் உதவியுடன் 18 படிகள் ஏறி, அய்யப்பனை தரிசனம் செய்தார். இது ஒரு மகா பாக்கியம் என்று அவர் கூறினார்.

மூதாட்டி பாருக்குட்டியுடன் செல்பி எடுப்பதில் பக்தர்கள் ஆர்வம் காட்டினர். கேரள மாநிலம் ஏற்றுமானுாரைச் சேர்ந்த தேஜஸ் இயக்கிய, ருத்திரன்றே நீராட்டு என்ற மலையாள திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். போதைப் பொருட்களுக்கு எதிரான முக்கிய தகவலை சொல்பவராக பாருக்குட்டி நடித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version