தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெற்றி பெற வேண்டும் என நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
திருநெல்வேலியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது அர்ப்பணிப்பு குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார். மேலும், “விஜய் அண்ணாவை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் கேரளாவில் வசிப்பதால் தமிழகத் தேர்தலில் அவருக்கு வாக்களிக்க முடியவில்லையே என்பதுதான் எனக்குப் பெரிய வருத்தமாக இருந்தது. இதற்காகவே நான் தமிழ்நாட்டில் இருந்திருக்கலாம் எனத் தோன்றியது.
புகழ், செல்வாக்கு என எல்லாம் இருந்தும், அவர் எதற்காக அரசியலுக்கு வருகிறார் என்றால், மக்கள் மீது அவர் கொண்டுள்ள மாறாத அன்புதான் காரணம். அத்தகைய மனிதர் இந்தத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்பதே என் ஆசை,” என்று தெரிவித்தார்.
திரையுலகில் ‘பூங்குழலி’யாக வலம் வரும் ஐஸ்வர்யா லக்ஷ்மியின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக, தமிழகத் தேர்தலில் தவெக எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் நிலவி வரும் சூழலில், ஒரு சக கலைஞராக அவர் அளித்துள்ள இந்த ஆதரவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மக்களிடையே நிலவும் ஆதரவை பார்க்கும் போது விஜய்யின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் அவர் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
