சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன் நடித்துள்ள பராசக்தி திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. படம் திரைக்கு வருவதற்கு முன்பு சென்சார் வழங்குவதில் இழுபறி நீடித்து வந்தது. இந்த சூழலில் படத்தில் 25 இடங்களில் காட்சிகள் மாற்றம் மற்றும் நீக்கம் செய்த பிறகே நேற்று சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அதன்படி, ’தீ பரவட்டும்’ என்பதற்கு பதிலாக ‘நீதி பரவட்டும்’ என்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ’இந்தி அரக்கி’ என்ற வசனம் ‘அரக்கி’ என மாற்றப்பட்டுள்ளது. இந்தி எழுத்துக்களின் மீது சாணம் அடிக்கும் காட்சி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ‘ அந்த அச்சம் எவ்வளவு காலம் உங்களிடம் இருக்கிறதோ, அவ்வளவு காலமும் அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆளுகிறான் என்று பொருள்” என பேரறிஞர் அண்ணா பேசுவது போன்ற காட்சிகளும் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
இதை தவிர்த்து சில இடங்களில் மியூட் செய்யப்பட்டுள்ளன. தீ கொளுந்து விட்டு எரியும் காட்சிகள், வன்முறை காட்சிகள், இறந்த உடல்களை காட்டும் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளன. இத்தகைய மாற்றங்களுக்கு பிறகு திரைக்கு வந்திருக்கும் பராசக்தியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதேநேரம் பேரறிஞர் அண்ணா பேசுவதாக நீக்கம் செய்யப்பட்ட காட்சி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறாது. ‘ அந்த அச்சம் எவ்வளவு காலம் உங்களிடம் இருக்கிறதோ, அவ்வளவு காலமும் அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆளுகிறான் என்று பொருள்” என்பதை பலரும் ஷேர் செய்து வருவதுடன், அந்த பயம் இருக்கம்னுடா என கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
