கும்பமேளாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றவர் நடிகை மோனாலிசா. அந்தப் புகழின் மூலம் அவருக்குத் திரையுலகில் வாய்ப்புகள் தேடி வந்தன. அந்த வகையில், தற்போது ‘தி டைரி ஆஃப் மணிப்பூர்’ (The Diary of Manipur) என்ற திரைப்படத்தில் அவர் நடித்துள்ளார். ஆனால், தனது முதல் பட அனுபவமே தனக்கு மிகப்பெரிய கசப்பைத் தந்துள்ளதாக அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா தன்னிடம் மிகவும் மோசமான முறையில் நடந்து கொண்டதாக அவர் பகீர் புகாரை முன்வைத்துள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா தன்னைத் தவறான எண்ணத்துடன் அணுகியதாகவும், பலமுறை தன்னைத் தகாத முறையில் தொட்டதாகவும் மோனாலிசா குற்றம் சாட்டியுள்ளார். “கும்பமேளாவில் எனக்குக் கிடைத்த அங்கீகாரத்தால் நான் சினிமாவுக்கு வந்தேன். ஆனால், ஒரு அறிமுக நடிகை என்பதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?” என்று அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். படப்பிடிப்பின் போது தனக்கு நேர்ந்த இந்த பாலியல் அத்துமீறல்கள் தன்னை மனரீதியாகப் பெரிதும் பாதித்துள்ளதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் தனது பெற்றோரின் அணுகுமுறை குறித்தும் அவர் உருக்கமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். “என் அருகில் பெற்றோர் இருந்தும், அவர்களுக்குப் பணம் மட்டுமே குறிக்கோளாக இருந்தது. அதனால் எனக்கு நேர்ந்த அநீதியை அவர்கள் ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை” என்று அவர் தெரிவித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரையுலகில் நுழையும் இளம் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையா என்கிற விவாதத்தை மோனாலிசாவின் இந்தப் புகார் மீண்டும் கிளப்பியுள்ளது.
