கடனாக பெற்ற பணத்தை திருப்பி செலுத்தும் வரை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்த “வா வாத்தியார்” திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள “வா வாத்தியார்” திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 5-ம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால், அன்று வெளியாகவில்லை. மேலும் டிசம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற சொத்தாட்சியர் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவர் திவாலானவர் என கடந்த 2014 ஆம் ஆண்டு அறிவித்து அவருடைய சொத்துக்களை நிர்வகிக்க சொத்தாட்சியரையும் நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜூன்லால் சுந்தர்தாஸிடம் இருந்து ஸ்டூடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனம் 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தது. அந்த தொகை வட்டியுடன் சேர்த்து தற்போது 21 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உள்ளது.
அந்த தொகையை செலுத்த ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் உரிமையாளர் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அவர் தயாரித்துள்ள “வா வாத்தியார்” திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கவும், படம் மூலம் கிடைக்கும் வருவாயை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரியும் சொத்தாட்சியர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், “வா வாத்தியார்” திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம், சி.குமரப்பன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே பலமுறை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், முழு தொகையையும் செலுத்தவில்லை. கங்குவா, தங்கலான் உள்ளிட்ட படங்களை திரையிடுவதற்கு முன் 1 கோடி ரூபாய் வைப்பாகவும் நீதிமன்றத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் செலுத்துவதாக உத்தரவாதம் அளித்து, திரைப்படத்தை வெளியிட அனுமதி பெற்றது.
தற்போது மீண்டும், கடனை செலுத்தாமல் அவகாசம் கேட்பதை ஏற்க முடியாது. இதுவரை 7 முறை கடனை செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டது. அதனால், நாளை திரையிட திட்டமிட்டுள்ள “வா வாத்தியார்” படத்திற்கு தடை விதிக்கப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
