ஹாலிவுட் என்ற வார்த்தையை நினைவு கூறும் பொழுது அதிலும் குறிப்பாக சண்டை காட்சிகள் என்று வந்துவிட்டால் டாம் குரூஸின் பெயர் நிச்சயம் அனைவரது எண்ணத்திலும் வந்து நிற்கும். பார்க்கும் பார்வையாளர்கள் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த சண்டைக் காட்சி உண்மையில் தத்ரூப வடிவமா அல்லது ஏதேனும் கிராபிக்ஸ் வடிவமா என்று யோசிக்கும் அளவிற்கு எந்தவித டூப்பும் இல்லாமல் தன் உயிரை பணயம் வைத்து சண்டைக் காட்சிகளில் வித்தை காட்டும் கெட்டிக்காரர்.
பொதுவாக நடிகர்கள் அனைவருக்கும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது ஆஸ்கார் விருது வெல்ல வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். 63 வயதான டாம் குரூஸின் பெயர் இதுவரை நான்கு முறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பார்ன் ஆன் தி போர்த் ஆப் ஜூலை மற்றும் ஜெரி மகுயர் ஆகிய திரைப்படங்களுக்காக சிறந்த நடிகருக்காகவும், மேக்னோலியா திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்காவும், டாப் கன்:மாவெரிக் திரைப்படத்திற்காக சிறந்த தயாரிப்பாளருக்காகவும் இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
1981 முதல் தற்பொழுது வரை அசராமல் நடித்துக் கொண்டிருக்கும் இவருக்கு நேற்று (நவம்பர் மாதம் 16ஆம் தேதி, 2025) ஞாயிற்றுக்கிழமை இரவு அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அமைப்பு கௌரவ ஆஸ்கர் விருது வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது. விருதினை வென்ற டாம் குரூஸ், “நாம் எங்கிருந்து வந்தாலும் திரையரங்கம் என்று வந்துவிட்டால் அங்கே நாம் ஒன்றாக சிரிக்கிறோம், ஒன்றாக உணர்கிறோம், ஒரு விஷயத்தை நாம் அனைவரும் ஒன்றாக நம்புகிறோம். அதுவே கலை வடிவின் சக்தி. திரைப்படங்களை உருவாக்குவது நான் செய்யும் வேலை அல்ல, திரைப்படங்களை உருவாக்குவது தான் நான், அதுவே என் வாழ்க்கை” என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
https://x.com/kylebuchanan/status/1990285360136626274?t=CcTJZ_soRjlSOEnx-8_XfA&s=19
கௌரவ ஆஸ்கார் விருதினை நான்கு முறை ஆஸ்கார் விருதை வென்ற புகழ்பெற்ற மெக்சிகன் இயக்குனரான அலஜென்ரோ கோன்சலாஸ் இன்னாரிடு கையினால் டாம் குரூஸ் பெற்றுக் கொண்டார்.
தற்பொழுது இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றும் திரைப்படம் அடுத்த வருடம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
