தென்காசி அருகே 2 தனியார் பேருந்துகள் பயங்கரமாக மோதிக் கொண்ட விபத்தில் பயணிகள் 6 பேர் உயிரிழந்தனர்.
பல்லடத்தில் இருந்து தென்காசி நோக்கியும், ராஜபாளையத்தில் இருந்து தென்காசி நோக்கியும் 2 தனியார் பேருந்துகள் சென்று கொண்டிருந்தன. கடைநல்லூர் அருகே பேருந்துகள் சென்ற போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஒரு பேருந்து எதிர்பாராதவிதமாக மற்றொரு பேருந்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பெண்கள் உள்பட பயணிகள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சிறுவர்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமந்தனர்.
பயங்கர விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அப்பகுதி மக்களுடன் இணைந்து, 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலம் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு, தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். காயமடைந்தவர்களின் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தனியார் பேருந்துகள் போட்டி போட்டுக் கொண்டு அதி வேகமாக சென்றதன் காரணமாக இந்த பயங்கர விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
