தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய் விரைவில் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார். இதற்காக இன்று அவர் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். தவெக-விற்கு காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளிடமும் ஆதரவு கோரும் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் ஓரிரு தினங்களில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய அமைச்சரவையில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், கட்சியின் முக்கியப் பிரமுகர்களான புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல் குமார் ஆகியோருக்கு முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. முதலில் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, அமைச்சரவைக் குழுவினர் பொறுப்பேற்பார்கள். அதன் பின்னர் சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை விஜய் நிரூபிப்பார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் பட்டியல் ஆளுநர் மாளிகையிலிருந்து விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு இந்தப் புதிய அரசில் மிக முக்கியமான பொறுப்பு வழங்கப்பட உள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. தற்போதைய தகவல்களின்படி, அவருக்கு தற்காலிக சபாநாயகர் பதவி வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான பரிந்துரைக் கடிதத்தை விஜய் ஆளுநரிடம் வழங்கி உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளுநரால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படும் செங்கோட்டையன், அதன் பிறகு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். மேலும், அவர் சட்டமன்ற முன்னவராகவும்  செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version