திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் கூட்டணியில் பாமக இடம்பெறும் என்று அன்புமணி அறிவித்துள்ளார்.

‘தமிழக மக்கள் உரிமை மீட்பு’ பயணம் என்ற பேரில் அன்புமணி ராமதாஸ் 108 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டார். ஜூலை 25 ஆம் தேதி திருப்போரூரில் தொடங்கிய இந்த நடைபயணம் நவம்பர் 9 ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் நிறைவடைந்தது. இந்த பயணத்தில் விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் என, பலதரப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை அன்புமணி கேட்டறிந்தார்.

நடைபயணத்தின் மூலம் கிடைத்த அனுபவங்கள் குறித்து சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களிடம் அன்புமணி ராமதாஸ் பகிர்ந்துக் கொண்டார்.

அப்போது அவர், “என்னுடைய 28 ஆண்டுகால அரசியல் அனுபவத்தில் இந்த 108 நாட்கள் மிகவும் முக்கியமான ஒன்று. தினமும் நடைபயணத்தின் மூலமாக நான் சுட்டிக்காட்டிய சில பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு கிடைத்திருக்கிறது. மற்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுவதற்கு தொடர்ந்து தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறேன். பலகட்ட போராட்டங்களின் மூலம் மற்ற பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்க பாமக போராடும்.

வடசென்னையில் தமிழக அரசு செயல்படுத்தும் குப்பை எரி உலை திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். இதன் காரணமாக புற்றுநோய், இதய நோய், ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. ராணிப்பேட்டை குரோமிய கழிவுகளை அகற்ற 700 கோடி ரூபாயில் திட்டத்தை உருவாக்க வேண்டும். ஆனால் அந்த மாவட்டத்தில் உள்ள அமைச்சர் காந்தி எந்த அக்கறையும் இல்லாமல் செயல்படுகிறார்.

தமிழகத்தில் மாம்பழம் விளைவிக்கும் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு நஷ்டம் ஏற்பட்டது. அதனை தவிர்க்க இனி ஆந்திரா, கர்நாடகாவில் வழங்கப்படுவது போல குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அதாவது ஒரு டன் மாம்பழத்திற்கு 25 ஆயிரம் வரை கொள்முதல் விலையை நிர்ணயிக்க வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் கொண்டு வரக்கூடாது என போராடிய விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைத்த கொடூரமான அரசாக திமுக அரசு திகழ்ந்து வருகிறது. வள்ளலார் பெருவழி இடத்தை வள்ளலார் பன்னாட்டு மையமாக அமைப்பதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தொடர்ந்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் வள்ளலாரின் சாபம் திமுகவை சும்மாவிடாது,” என்றார்.

மேலும் பேசிய அவர், “தமிழ்நாட்டில் போதுமான நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லை. தமிழகத்தில் ஆண்டுதோறும் 45 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் நிலையில் தமிழக அரசிடம் வெறும் 18 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகள் மட்டுமே உள்ளன. இது போதுமானது அல்ல. தமிழ்நாட்டில் விளையும் நெல்லில் மூன்றில் ஒரு பங்கைதான் தமிழக அரசு கொள்முதல் செய்கிறது. மீதமுள்ள இரண்டு பங்கு நெல் தனியாரிடம் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் நெல்மணிகள் உரிய நேரத்தில் கொள்முதல் செய்யப்படாத காரணத்தால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான டன் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாகின்றன. தமிழக அரசு இதற்காக தனியாக நிதி ஒதுக்கி விவசாயிகளின் இழப்பை தடுக்க வேண்டும்.

இந்தியாவில் மிகவும் மாசடைந்த நிலையில் 37 நதிகள் உள்ளன. அவற்றில் 5 நதிகள் தமிழ்நாட்டில் உள்ளன. கூவம் ஆறு, அடையாறு, சரபங்கா நதி, திருமணிமுத்தாறு, வசிஷ்ட நதி ஆகியவை மிக மிக மாசடைந்த நதிகளாக உள்ளன. அவற்றை சரி செய்ய திமுக அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை,” என்று குற்றம்சாட்டினார்.

அத்துடன், “வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெறும். கூட்டணி மந்திரி சபை அமையுமா? என்பது குறித்து, இப்போது சொல்ல முடியாது. தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் தான் சொல்ல முடியும். வெளிநாட்டு தொழில் முதலீடுகள் சம்பந்தமாக நான் எந்த காழ்ப்புணர்ச்சியிலும் பேசவில்லை.

உண்மையில் தமிழ்நாட்டிற்கு வந்துள்ள முதலீடுகள் குறித்து ஆவண புத்தகம் வெளியிட்டிருக்கிறேன். இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பதில் அளிக்க வேண்டும். தொழில் முதலீடுகள் சம்பந்தமாக மேடை போடுங்கள். விவாதத்திற்கு வர நான் தயார். திமுக என்னுடன் விவாதம் செய்ய தயாரா?” என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version