தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் முன்சொல்லப்படாத ஒரு அரசியல் புரட்சி அரங்கேறி வருகிறது. வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்  மாநிலம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக, தலைநகர் சென்னையின் 16 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் அசைக்க முடியாத ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றனர். இந்த அதிரடி மாற்றத்தால் ஆளும் திமுக அமைச்சரவை நிலைகுலைந்து போயுள்ளது. மொத்தமுள்ள 31 அமைச்சர்களில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், பி.டி.ஆர். பழனிவேல் ராஜன், கோ.வி செழியன், மா. சுப்பிரமணியன், கே.என். நேரு, அன்பில் மகேஷ் உள்ளிட்ட 21  முக்கிய அமைச்சர்கள் தங்களது தொகுதிகளில் பின்னடைவைச் சந்தித்து வருவது அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தவெக-வின் இந்த அபார முன்னிலையைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள பனையூர் பகுதியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.  தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்க பனையூர் அலுவலகத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய்யின் இல்லத்திற்கும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் தேர்தலிலேயே ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி, தனிப்பெரும் சக்தியாக தவெக உருவெடுத்து வருவது தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version