திமுக கூட்டணியில் இஸ்லாமியர்கள் போட்டியிட 16 தொகுதிகள் கேட்டுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் கூறினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தகவல் தொழில்நுட்ப அணியின் பொதுக்குழுக் கூட்டம் திருச்சி ஏ.எம்.கே மஹாலில் மாநில தலைவர் எம்.எஸ்.சல்மான் முஹம்மது தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குறிப்பாக, இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தை தொடர்ந்து 19.12.2025 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தமிழ்நாட்டில் 97 லட்சத்து 37 ஆயிரத்து 832 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான செய்தி வெளி வந்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் முஸ்லிம் வாக்காளர்கள் அனைத்து மாவட்டங்களிலும் நீக்கப்பட்டுள்ளார்கள். இதனால் வாக்குரிமை மட்டுமின்றி ஒன்றிய அரசின் சூழ்ச்சி அரசியலான குடியுரிமையும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. எனவே டிசம்பர் 19 முதல் ஜனவரி 18 வரை நடைபெற உள்ள புதிய வாக்காளர் பதிவு வெளிநாடுவாழ் வாக்காளர் பதிவு, வாக்காளர் திருத்தம் போன்ற பணிகளில் அதற்குரிய படிவங்களில் மனு செய்து எவருடைய பெயரும் விடுபட்டு விடாமல் முழுமையான கவனத்தை செலுத்த முழு அளவில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கி கௌரவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்த கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹாஜிகளின் வசதிக்காக தமிழ்நாடு முஸ்லிம்களின் கோரிக்கையை ஏற்று சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் ஹஜ் இல்லத்தை ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு அரசு சார்பில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்ததற்கும், இந்திய அரசியல் நிர்ணய சபையில் தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும் என்று குரல் கொடுத்த காயிதே மில்லத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் திருநெல்வேலியில் ரூ.110 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசு சார்பில் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டி பணி தொடங்கி வைத்ததற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதன் பின்னர் கே.எம். காதர் மொகிதீன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ”எஸ்ஐஆர் கணக்கெடுப்பில் இறந்தவர்கள் இரட்டை பதிவு உள்ளவர்களை நீக்கியது சரி தான். ஆனால் இடம்பெயர்ந்தவர்கள் நீக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதை ஜனவரி மாதத்திற்குள் தேர்தல் ஆணையம் சரி செய்யும் என நம்புகிறோம்.
திமுக கூட்டணியில் இஸ்லாமியர்கள் போட்டியிட 16 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என தலைமையிடம் வலியுறுத்தியுள்ளோம். அதில் 5 தொகுதிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு கேட்டுள்ளோம்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக திருச்சி கிழக்கு, சென்னை ஆயிரம் விளக்கு, ராயபுரம், வில்லிவாக்கம், பாபநாசம் (தஞ்சை), கடையநல்லூர் ஆகிய தொகுதிகள் அடங்கும்.
திமுக தலைவராக கருணாநிதி இருந்த போது 16 தொகுதிகள் கேட்டோம். அதேபோல் தற்போதும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் கேட்டுள்ளோம்” என காதர் மொகிதீன் கூறினார்.
