தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக போலி செய்தி பரப்பியுள்ளனர். பிரேமலதா சாபம் திமுகவை சும்மா விடாது. பென் நிறுவனம் கற்பனைக்கு எட்டாத கதைகளை அவிழ்த்து விடுகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.
சுனாமி எனும் ஆழிப்பேரலை தாக்கியதன் 21 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி உயிரிழந்தோருக்கு அதிமுக சார்பில் சென்னை காசிமேடு கடற்கரையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அஞ்சலி செலுத்தும் விதமாக, பைபர் படகில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கடலில் சற்று தூரம் சென்று பால் ஊற்றி, மலர் தூவினார். பைபர் படகை சிறிது தூரம் ஜெயகுமாரே ஓட்டிச் சென்றார்.
இதன் பிறகு முன்னாள் அமைச்சர் டி. ஜெயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ”பிரேமலதா விஜயகாந்த் பேட்டியை முழுமையாகப் பார்த்தேன். அவர் மனவேதனையுடன் பேட்டி அளித்துள்ளார். அவர் விடுத்துள்ள சாபம் திமுகவிற்கே முழுமையாக பொருந்தும். சபரீசனின் பென் நிறுவனம் தான் அரசியல் ஆதாயம் பெறுவதற்காக, தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிகவிற்கு 6 தொகுதி ஒதுக்கப்பட்டதாக போலியான செய்தி பரப்பியுள்ளது. பிரேமலதா சாபம் திமுகவை சும்மா விடாது. பென் நிறுவனம் கற்பனைக்கு எட்டாத கதைகளை அவிழ்த்து விடுகிறது.
அதிமுகவிற்கு அமித்ஷா முதலாளி ஆகிவிட்டதாக திமுகவினர் கூறுவதாக சொல்கின்றீர்கள். அதிமுகவின் முதலாளி எப்போதும் எம்ஜிஆர் தான். ஆட்சி முடியப் போகும் போது மாணவர்களுக்கு திமுக மடிக்கணினி கொடுப்பது சாகும் போது சங்கரா… சங்கரா… என்று கூறுவது போல் உள்ளது. அவர்கள் பள்ளியில் படிக்கும் போதே மடிக்கணினி கொடுத்திருக்க வேண்டும். ஆனால் இப்போது கல்லூரி சென்றுவிட்ட நிலையில் வாக்களிக்கும் வயதை மனதில் வைத்து இப்போது மடிக்கணினி கொடுக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் வெட்கித் தலைகுனிய வேண்டிய சம்பவம். கள்ளச்சாராய உயிரிழப்பு ஏற்பட்டபோது அங்கு செல்லாத முதலமைச்சர் தேர்தல் வருவதால் இப்போது செல்கிறார். தெனாலி திரைப்படத்தில் வரும் கமல் எதை பார்த்தாலும் பயப்படுவது போல் உள்ளது ஸ்டாலினின் நிலை.
அதிமுகவுடன் ஒரு போதும் கூட்டணி இல்லை. எடப்பாடி பெயரை சொல்லவே வெட்கமாக உள்ளது என ஓ.பன்னீர்செல்வம் கூறியதாக சொல்கிறீர்கள். அவர் தனது கருத்தை கூறியுள்ளார். அவரை கூட்டணியில் இணைக்கலாமா? வேண்டாமா? என்று அதிமுக தலைமை தான் முடிவு செய்யும். கூட்டணியில் இணைய வாய்ப்பு இருக்கிறதா? என நான் கூற முடியாது. அரசியலில் ஆயிரம் இருக்கும். 4 சுவருக்குள் 4 விஷயம் நடக்கும். அதை எப்போ? சொல்லனுமோ அப்போ தான் சொல்லுவோம்.
ஓபிஎஸ்க்கு தொகுதிகளை வழங்குவது குறித்து பாஜக முடிவு செய்யும் என்று திரைக்கதை, வசனம் அனைத்தும் ஊடகங்கள் தான் எழுதியுள்ளன. தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. அவசரப்பட வேண்டாம். கூட்டணி குறித்து 4 சுவருக்குள் நடக்கும் விஷயங்களை வெளியே கூற முடியாது.
அதிமுக தேர்தல் அறிக்கை பொருளாதார வளர்ச்சியை, வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் இருக்கும். சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை. இந்தியா மதச்சார்பற்ற நாடு. வேற்றுமை, வேறுபாடு பார்க்கக் கூடாது” என்று கூறினார்.
