சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவித்த உடனே திமுகவுடனான தொகுதி பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஜனவரி 2 ஆம் தேதி முதல் மதிமுக கட்சி சார்பில் மது ஒழிப்பு சமத்துவ நடைபயணம் நடைபெறவுள்ளது. திருச்சியில் இந்த நடைபயணத்தை தொடங்கி வைக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அழைப்பிதழை வழங்கினார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் சமத்துவ நடைபயணம் குறித்தும், தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்தும் பகிர்ந்து கொண்டார்.
முதலில் சமத்துவ நடைபயணம் குறித்து பேசிய அவர், “மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், எச்சரிக்கை செய்கிற விதத்திலும் வரும் ஜனவரி 2 ஆம் தேதி சமத்துவ நடைபயணம் மேற்கொள்ளவுள்ளேன். இதில் பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள் இடம் பெறுகிறார்கள். இந்த மது ஒழிப்பு நடைபயணத்தை திருச்சி உழவர் சந்தையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் விசிக தலைவர் திருமாவளவன், கமல்ஹாசன் எம்பி உள்ளிட்டோரும் பங்கு பெறவுள்ளனர்.
ஜனவரி 12 ஆம் தேதி மதுரையில் கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் நிறைவு நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர். கட்டுப்பாட்டுடனும், போக்குவரத்து ஒழுங்கு நெறிமுறைகளை முறையாக கடைபிடித்தும் இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படும்” என்றார்.
தொடர்ந்து தேர்தல் குறித்து பேசிய வைகோ, “மக்கள் மத்தியில் திமுக கூட்டணிக்குத் தான் ஆதரவு இருக்கிறது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மத சார்பற்ற கூட்டணி தான் மகத்தான வெற்றி பெறும். புதிதாக அரசியலுக்கு வந்தவர் திராவிட முன்னேற்ற கழகத்தை வெல்ல முடியாது. தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும். இப்போது அதற்கான தேவை இல்லை” என்றார்.
