கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதை எதிர்த்த வழக்கு, திரும்பப் பெறப்பட்டதை அடுத்து தள்ளிபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு கரூரில் த வெ க தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகி இருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் பலியான 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கி சமீபத்தில் முதலமைச்சர் விஜய் உத்தரவுகளை நேரில் வழங்கி இருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சூளையைச் சேர்ந்த வழக்கறிஞர் என்.பிரபாகரன் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஏற்கனவே அரசு 10 லட்சம் ரூபாயும், த வெ க சார்பில் 20 லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ள நிலையில் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், அரசியல் கூட்டங்களில் உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வழக்கு புலங்குசாரணையில் உள்ள போது பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்குவது விசாரணையில் தலையிடுவதைப் போல உள்ளதாகவும், இது சாட்சியத்தை மாற்றிக் கொடுக்க நிர்பந்திக்கும் வகையில் உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி மற்றும் நீதிபதி ஜி அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கரூர் பெயர சம்பவம் தொடர்பான வழக்கில் சிபிஐ இறுதி அறிக்கை தாக்கல் செய்யும் வரை பணி நியமனம் உத்தரவுகளை வழங்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.  இதையடுத்து, மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version