ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இந்திய விளையாட்டு வீரர்கள் தொடர் வெற்றிகளைப் பெற்று அசத்தி வருகின்றனர். இதுவரை இந்திய அணி 2 தங்கம், 5 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளது.
மகளிர் பளுதூக்குதல் 48 கிலோ எடைப்பிரிவில் மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். மகளிருக்கான ‘ஷாட் புட்’ F57 பிரிவில் இந்திய வீராங்கனை ஷர்மிளா தங்கப் பதக்கம் வென்றார்.
ஆண்கள் பளுதூக்குதல் 60 கிலோ எடைப்பிரிவில் ரிஷிகந்தா சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். மேலும் பளுதூக்குதல் 65 கிலோ எடைப்பிரிவில் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். பளுதூக்குதல் 79 கிலோ பிரிவில் அஜர் பாபு வெள்ளிப் பதக்கத்தை வென்றார். மகளிர் பளுதூக்குதல் 53 கிலோ எடைப்பிரிவில் ஞானேஸ்வரி யாதவ் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
ஆண்கள் உயரம் தாண்டுதல் பிரிவில் சர்வேஷ் அனில் குஷாரே வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார்.
ஆண்கள் பாரா பளுதூக்குதல் பிரிவில் ஜந்து குமார் மற்றும் மகளிருக்கான ‘ஷாட் புட்’ F57 பிரிவில் பங்கேற்ற ஷில்பா கஞ்சுஹாரகோப்பலு, மகளிர் 58 கிலோ பளுதூக்குதல் எடைப்பிரிவில் பிந்தியராணி தேவி ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தி உள்ளனர்.
காமன்வெல்த் போட்டியில் இதுவரை மொத்தம் இந்திய அணி 2 தங்கம், 5 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என 10 பதக்கங்களை வென்று புள்ளிப் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.

