இன்றைய திருமணங்களில் தங்களது ஸ்டேட்டஸை நிரூபிக்க பல்வேறு விதமான இசைக் கச்சேரிகள் மற்றவர்களுக்கு எரிச்சலை தூண்டும் படியாக நடத்தப்படுகிறது. டிஜே என்ற பெயரில் பாடல்கள் கலந்து கலந்து அதிக சத்தத்துடன் ஒலிக்கப்படுவதால், மக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசுவது கூட சங்கடமாகி விடுகிறது.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரை வரை இதே நிலை தான் நீடிக்கிறது. இப்படி நிகழ்ச்சிகளின் போது ஒலிக்கப்படும் அதிக சத்தத்துடனான பாடல்கள் முலம் வயதானவர்கள், சிறு குழந்தைகளுக்கு உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
இந்த சத்தம் மனிதர்களுக்கு மட்டுமல்லாது, விலங்குகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பதை உத்தரபிரதேசத்தில் நடந்த நிகழ்வு நிரூபணப்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டம் தரியாபூர் கிராமத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 25-ம் தேதி திருமண ஊர்வலம் ஒன்று டிஜே கச்சேரியுடன் நடைபெற்றது. அதில் ஒலிக்கப்பட்ட அளவுக்கு மீறிய சவுண்ட் அங்குள்ள ஒரு கோழிப்பண்ணையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒலியின் அளவு தாங்காமல் அங்கு இருந்த 140 கோழிகள் இறந்துள்ளது. இது தொடர்பாக தரியாபூர் காவல்நிலையத்தில் கோழிப்பண்ணை உரிமையாளர் சாபீர் அலி புகார் அளித்துள்ளார். உயிரிழந்த கோழிகளுக்கு உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டதில், டிஜே இரைச்சல் கோழிகளுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தியதாகவும், அதனால் ஏற்பட்ட மாரடைப்பால் 140 கோழிகள் இறந்ததும் தெரியவந்துள்ளது.
இந்த உடற்கூறு ஆய்வின் அடிப்படையில் டிஜே இசைக்கச்சேரி நிர்வாகி கவி யாதவ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வினோதமான இந்த புதுவித வழக்கு உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
