இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் ஆன்லைன் மூலம்  பல்வேறு வசதிகளை ஒரே இணையதளத்தில்  பெறும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.

தவெக ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு துறை சார்ந்த நடவடிக்கைகளில் அமைச்சர்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டு மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம், கனிம வளம், போக்குவரத்து, டாஸ்மாக் உள்ளிட்ட துறைகளில் தவெக அமைச்சர்கள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கோயில்களின் அதிரடி ஆய்வுகள் நடத்தி, மாற்றங்களை செய்து வருகிறார். அண்மையில் திருச்செந்தூர் கோயிலில் சிறப்பு தரிசனத்துக்கு பக்தர்களிடம்  கூடுதல் பணம் வசூலிக்கும் புகாரில் நேரில் ஆய்வு செய்த அமைச்சர் ரமேஷ், அர்ச்சகர் மற்றும் கோயில் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டார். மேலும், கோயில் பூஜைப்பொருட்கள் விற்பனை தொடர்பாகவும் பல்வேறு கட்டுப்பாட்டுகளை விதித்து உத்திரவிட்டார்.

இந்தநிலையில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் ஆன்லைன் மூலம் பல்வேறு வசதிகளை ஒரே இணையதளத்தில்  பெறும் திட்டம் தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் ரமேஷ் ஆலோசனை மேற்கொண்டார். அதன்படி, ஆன்லைன் மூலம்  தரிசன அனுமதி சீட்டு, பூஜைகள் முன்பதிவு, அன்னதான அனுமதி சீட்டு,பிரசாதம் வாங்குதல், திருமண மண்டபம் முன்பதிவு மற்றும் தங்குமிட புக்கிங் என அனைத்தும் ஒரே இணையதளத்தில்  பெறும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.

முதற்கட்டமாக இரண்டு கோயிலில் சோதனை முறையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து படிப்படியாக முக்கிய கோயில்களில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version