ந்தியாவில் பல்வேறு குற்றங்களில் சிக்கி வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற 274 பேரை, கடந்த 2019 முதல் இதுவரை 36 நாடுகளிலிருந்து மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பயங்கரவாதம், கொலை, பாலியல் குற்றங்கள், பொருளாதார மோசடி, போதைப்பொருள் மற்றும் இணையவழிக் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டவர்களே இதில் இடம்பெற்றுள்ளனர்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் குற்றம் செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற பலர், பெயரை மாற்றி புதிய அடையாளங்களுடன் பல ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்து வந்தனர். இந்திய சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்ட அவர்களை, வெளிநாட்டு அரசுகளுடன் மேற்கொண்ட ஒத்துழைப்பு, நாடு கடத்தல் ஒப்பந்தங்கள் மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் மூலம் மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர முடிந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த 274 பேரில் 62 பேர் கொலை, கொள்ளை உள்ளிட்ட கடுமையான குற்றங்களில் தொடர்புடையவர்கள். மேலும் 53 பேர் பாலியல் வன்கொடுமை, பாலியல் தாக்குதல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் தேடப்பட்டவர்கள். அதேபோல், 17 பேர் பயங்கரவாதம், தேசவிரோத நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், குண்டர் கும்பல்கள் மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் தொடர்பாக 2 பேரும் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதுதவிர, ஆட்கடத்தல், போதைப்பொருள் கடத்தல், இணையவழி மோசடி, கள்ளநோட்டு வழக்குகள், நிதி மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் தேடப்பட்டவர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

ஆண்டு வாரியாக பார்க்கும்போது, 2019-ல் 9 பேரும், 2020-ல் 7 பேரும் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து, 2021-ல் 23, 2022-ல் 40, 2023-ல் 37, 2024-ல் 43 மற்றும் 2025-ல் அதிகபட்சமாக 70 பேராக உயர்ந்தது. 2026-ஆம் ஆண்டு ஜூலை மாத இறுதிக்குள் மட்டும் மேலும் 45 தப்பியோடிய குற்றவாளிகள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version