2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தேர்வு குறித்து ரவிசந்திர அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது யூடியூப் தளத்தில் பேசிய அஸ்வின், கே.எல். ராகுல் இந்திய அணியின் முதல் தேர்வு விக்கெட் கீப்பராக இருப்பார் என்று கருத்து தெரிவித்துள்ளார். இஷான் கிஷன் ஒருநாள் போட்டியில் சதம் அடித்திருந்தாலும், அவரை உலகக் கோப்பை அணியில் சேர்ப்பது குறித்து முடிவு செய்ய இது மிக ஆரம்பக் கட்டம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரிஷப் பண்ட் ஒருநாள் போட்டிகளில் மிடில் ஆர்டரில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளதால், தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்காக அவரை இவ்வளவு விரைவாக அணியிலிருந்து நீக்குவது சரியாக இருக்காது என்று அஸ்வின் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு அணியில் அதிக வாய்ப்புகள் வழங்கப்படுவதாகவும், தேர்வுக்குழு அவரை பெரிதும் நம்புவதாகவும் அஸ்வின் கூறியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சுந்தரின் பங்களிப்பை அவர் பாராட்டினாலும், ஒருநாள் போட்டிகளில் அவர் இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.
