தமிழகத்தில் உள்கட்டமைப்பு மற்றும் வீட்டு வசதித் திட்டங்களுக்குத் தேவையான கட்டுமானப் பொருட்களின் தட்டுப்பாட்டைப் போக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யவும், தமிழக அரசு அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

தமிழக அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள அரசாணையில், இந்தத் தடைக்கான முக்கியக் காரணங்கள் விளக்கப்பட்டுள்ளன:

தமிழகத்தில் தற்போது உள்கட்டமைப்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால், ஜல்லி, எம்-சாண்ட் (M-Sand), பாறைகள் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் தேவை மாநிலத்திற்குள் பெருமளவில் அதிகரித்துள்ளது. பெருமளவிலான கட்டுமானப் பொருட்கள் அண்டை மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதால், தமிழகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயர்வு மற்றும் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் மல்டி-ஆக்சில் லாரிகளால் உள்ளூர் சாலைகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.

மேலும், இத்தகைய வாகனங்களால் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையே உள்ள இடைவெளி, சட்டவிரோத குவாரித் தொழிலுக்கும், அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி கற்களை வெட்டி எடுப்பதற்கும் வழிவகுக்கிறது. இது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி உள்ளிட்ட சூழலியல் மண்டலங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. ஜல்லி, கற்கள், கண்டாஸ், பாறைகள், எம்-சாண்ட், மெட்டல் ஜெல்லி, பாலாஸ்ட், மில் கற்கள் மற்றும் ஹேண்ட் சக்காய்ஸ் போன்ற கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படும் அனைத்துப் பொருட்களும் இந்தத் தடையின் கீழ் வரும்.

இந்தத் தடை உத்தரவு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிக்குக் கொண்டு செல்லும் கட்டுமானப் பொருட்களுக்குப் பொருந்தாது. இந்தத் தற்காலிகத் தடை உடனடியாக அமலுக்கு வருகிறது மற்றும் 3 மாத காலத்திற்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவைச் சரியாகச் செயல்படுத்துவதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் தடையை மீறிச் செயல்படுபவர்கள் மீது தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version