திமுகவோடு கூட்டணி வைக்க பழனிசாமி துணிந்தது தற்கொலைக்கு சமமானது என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
கிண்டி காந்தி மண்டபத்தில் அயோத்திதாச பண்டிதரின் பிறந்த நாள் நிகழ்வில் பங்கேற்ற பின்னர் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு பரபரபு தகவல்களை வெளியிட்டார்.
அயோத்திதாச பண்டிதரின் சமூக நீதிக் கொள்கைகளைப் பின்பற்றி, சமூக நீதிக்கான சத்தியப் பிரமாணத்துடன் தற்போதைய ஆட்சி செயல்படும். திமுக அரசின் நிதிநிலை குறித்த அறிக்கை விரைவில் வெளியிடப்படும். அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான அறிவிப்புகளை முதலமைச்சர் விரைவில் வெளியிடுவார் என்றும் அவர் தெரிவித்தார்.
சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளதாகவும், காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் இணைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் இடதுசாரி கட்சிகளின் கொள்கை முடிவுகளை இந்த அரசு எப்போதும் மதிக்கும். சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மை கொள்கைகளில் இந்த அரசு உறுதியாக நின்று செயல்படும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதியளித்தார்.
விசிக (விடுதலை சிறுத்தைகள் கட்சி) மற்றும் ஐயுஎம்எல் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) உள்ளிட்ட கட்சிகளை அமைச்சரவையில் இணைய அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். மதச்சார்பற்ற சிந்தனை கொண்ட அனைத்து தலைவர்களும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும். அமைச்சரவை ஒரு அன்பான குடும்பம் போல இயங்க வேண்டும் என முதலமைச்சர் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
2026 தேர்தல் மாற்றம்
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஒன்றிணைந்து புதிய மாற்றத்தை உருவாக்கினர். 50 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய அரசியல் சூழல் உருவானது. தங்கள் தலைவரின் தலைமையில் அரசு அமைய மக்கள் பெரும் ஆதரவு அளித்தனர். தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மக்களின் நம்பிக்கையைப் பெற்ற பின்னர், எதிர்க்கட்சித் தலைவராகப் பழனிசாமி செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், மக்களின் தீர்ப்புக்கு எதிராகக் கூட்டணி உருவாக்க பழனிசாமி கடைசி நிமிடம் வரை முயற்சித்தார். இதை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, சிபிஎம் தேசிய பொதுச் செயலாளர் பேபி, இடதுசாரி தலைவர்கள் பெ.சண்முகம், மு.வீரபாண்டியன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் ஏற்றுக்கொள்ளவில்லை.
அதிமுக தொடங்கப்பட்டதே திமுகவை எதிர்த்துதான். தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்ட திமுக தலைவர்கள், “அதிமுகவுக்கு வாக்களித்தால் பாஜக ஆட்சி அமையும்” என்று கூறினர். ஆனால், தேர்தலுக்குப் பின் திமுக தன் கொள்கைகளை மறந்து அதிமுகவுடன் இணைந்து மக்களின் தீர்ப்புக்கு எதிரான அரசை உருவாக்க முயன்றது. கொலைப்புற வழியில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக முயன்றார். இதனால் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. சி.வி.சண்முகம் தலைமையில் புதிய அணி உருவானது. அதிகாரம் அல்லது அமைச்சர் பதவிக்காக இல்லை என்று சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், உதயநிதி இணைந்து அதிகாரப் பேரம் நடத்தியது மக்களின் தீர்ப்புக்கு எதிரானது என்று ஆதவ் அர்ஜுனா விமர்சித்தார். அதிமுகவுடன் கூட்டணி வைத்தது தற்கொலைக்குச் சமம் என்றும், ஜெயலலிதா உருவாக்கிய அதிமுகவை தோழமையுடன் பார்ப்பதாகவும் அவர் கூறினார். அதிமுகவில் ஏற்பட்ட பிளவை சி.வி.சண்முகம் வழிநடத்துவார். அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் சட்ட சிக்கல்களை அவர் எதிர்கொள்வார். அதிமுக நலமாக இருக்க வேண்டும் என்பதே தங்கள் விருப்பம் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முடித்துக் கொண்டார்.
