தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு இன்று ஒரு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 234 தொகுதிகளிலும் நடைபெற்று வரும் வாக்குப்பதிவில், மாலை 5 மணி நிலவரப்படி மாநிலம் முழுவதும் 82.24% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் இதே மாலை 5 மணி வரை வெறும் 63.60% வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்த நிலையில், இந்த முறை சுமார் 19% கூடுதல் வாக்குகள் பதிவாகி ஜனநாயகத் திருவிழாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. எப்போதும் வாக்குப்பதிவில் சுணக்கம் காட்டும் தலைநகர் சென்னையில், இந்த முறை யாரும் எதிர்பார்க்காத வகையில் 81.34% வாக்குகள் பதிவாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட வாரியான கணக்கீட்டில் கரூர் மாவட்டம் 89.32% வாக்குப்பதிவுடன் முதலிடத்தை நோக்கி முன்னேறி வருகிறது. அதனைத் தொடர்ந்து தருமபுரியில் 87.28%, திண்டுக்கல்லில் 86.35%, அரியலூரில் 83.09% மற்றும் கோவையில் 82.33% எனப் பல மாவட்டங்கள் 80 சதவீதத்தைக் கடந்துள்ளன. தென் மாவட்டமான மதுரையில் 77.89% வாக்குகள் பதிவாகியுள்ளன. மாலை 6 மணி வரை வரிசையில் நின்ற அனைவருக்கும் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், இறுதி நிலவரம் வெளியாகும்போது தமிழகம் ஒட்டுமொத்தமாக 90 சதவீதத்தை நெருங்கி ஒரு மாபெரும் வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version