FIFA உலகக் கோப்பை 2026 கால்பந்து தொடரில் இன்றைய ஆட்டங்கள் மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்று முடிந்துள்ளன. இதில் ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் தமது பிரிவுகளில் வெற்றியைப் பதிவு செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளன.

டி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் துருக்கி அணிகள் மோதின. ஆட்டத்தின் ஆரம்ப நிமிடங்களில் துருக்கி அணி பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்து ஆஸ்திரேலியாவுக்கு கடும் அழுத்தம் கொடுத்து வந்தது. களத்தில் துருக்கியின் கை ஓங்கியிருந்த அந்தத் தருணத்தில், ஆஸ்திரேலியாவுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்தது.

பால் ஒகான்-எங்ஸ்ட்லர் (Paul Okon-Engstler) மிகச் சரியாகக் கணக்கிட்டு வழங்கிய அந்தத் துல்லியமான பாஸை, நெஸ்டோரி இரான்குண்டா (Nestory Irankunda) மின்னல் வேகத்தில் கைப்பற்றினார். துருக்கி ஆட்டத்தை லாவகமாக முறியடித்த அவர், பந்தை லாவகமாக வலைக்குள் செலுத்த, மைதானமே அதிர்ந்தது. துருக்கியின் ஆதிக்கத்தை ஒரே நொடியில் சுக்குநூறாக உடைத்த இந்த அபார கோல், ஆஸ்திரேலியாவை 1-0 என முன்னிலை பெறச் செய்தது. துருக்கி அணி ஆட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்றபோது, ஆஸ்திரேலியா தனது முதல் வாய்ப்பையே கோலாக மாற்றி, ‘நாங்களும் களத்தில் இருக்கிறோம்’ என அதிரடியாக நிரூபித்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் துருக்கி அணி பந்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த போதும், ஆஸ்திரேலியாவின் தற்காப்பு அரணை அவர்களால் உடைக்க முடியவில்லை. ஆட்டத்தின் 75வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் கானர் மெட்காஃப் லாங் ரேஞ்ச் ஷாட் மூலம் 2வது கோலை அடித்து துருக்கிக்கு அதிர்ச்சியளித்தார். இதனால் ஆஸ்திரேலியா 2-0 என முன்னிலை பெற்று இறுதியில் எளிதாக வெற்றியும் பெற்றது.  இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா தனது புள்ளிப் பட்டியலை வலுப்படுத்தியுள்ளது. துருக்கி அணி போராடியும், ஆஸ்திரேலியாவின் வலுவான தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, குரூப் டி பிரிவில் ஆஸ்திரேலியா 3 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

இதேபோல், C பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஸ்காட்லாந்து மற்றும் எயிட்டி அணிகள் நேருக்கு நேர் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ஸ்காட்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் எயிட்டி அணியைத் தோற்கடித்து வெற்றியைத் தன்வசப்படுத்தியது. இரு அணிகளும் சமபலத்துடன் மோதிய போதிலும், ஸ்காட்லாந்து அணியின் துல்லியமான கோல் அந்த அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தது.

FIFA உலகக் கோப்பையில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ள ஸ்காட்லாந்து அணி, தற்போது குரூப் C பிரிவில் முதலிடத்தில் கம்பீரமாக உள்ளது. பிரேசில் மற்றும் மொராக்கோ போன்ற வலுவான அணிகளைப் பின்னுக்குத் தள்ளி ஸ்காட்லாந்து பெற்றுள்ள இந்த முன்னிலை, அந்நாட்டு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகக் கோப்பை தொடரின் அடுத்தடுத்த சுற்றுகளை நோக்கி முன்னேற இந்த வெற்றிகள் இந்த இரு அணிகளுக்கும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இன்றைய ஆட்டங்களின் முடிவுகள், கால்பந்து ரசிகர்களிடையே அடுத்தகட்ட போட்டிகளுக்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version