கால்பந்து வரலாற்றில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய 48 அணிகள் பங்கேற்கும் 2026 ஃபீஃபா உலகக் கோப்பை தொடர் இன்று ஜூன் 11 முதல் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இத்தொடரில் லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகிய இரு ஜாம்பவான்களும் தங்களது 6-ஆவது உலகக் கோப்பையில் விளையாடி வரலாற்று சாதனை படைக்கவுள்ளனர்.

இருப்பினும், இதுவரை உலகக் கோப்பை மேடையில் இவர்கள் இருவரும் ஒருவருக்குக் களத்தில் ஒருவர் நேருக்கு நேர் மோதியதே இல்லை. நடப்புத் தொடரில் அர்ஜென்டினா குரூப் J பிரிவிலும், போர்ச்சுகல் குரூப் K பிரிவிலும் இடம்பெற்றுள்ளதால், லீக் சுற்றில் இவர்கள் மோத வாய்ப்பில்லை. ஆனால், நாக்-அவுட் சுற்றுகளில் இவர்கள் மோதக்கூடிய 3 சாத்தியமான வழிகளும் உள்ளன.

அர்ஜென்டினா மற்றும் போர்ச்சுகல் ஆகிய இரு அணிகளும் தமது பிரிவுகளில் முதலிடத்தைப் பிடித்து நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றால், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மோதல் நிகழ அதிக வாய்ப்புள்ளது.

இரு அணிகளும் தங்களது பிரிவுகளில் 1-ஆம் இடம் பிடித்து, அதைத் தொடர்ந்து வரும் ‘ரவுண்ட் ஆஃப் 32’ மற்றும் ‘ரவுண்ட் ஆஃப் 16’ ஆகிய இரண்டு நாக்-அவுட் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். இந்த இரண்டு சுற்றுகளிலும் இரு அணிகளும் வெல்லும் பட்சத்தில், அவர்கள் காலிறுதிப் போட்டியில்  நேருக்கு நேர் மோதுவார்கள்.

இதேபோல், முன்னணி அணிகளுக்கு லீக் சுற்றில் ஏதேனும் எதிர்பாராத சரிவுகள் ஏற்பட்டு, இரண்டு அணிகளுமே தங்களது குழுக்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்தால் இந்த மோதல் மிக விரைவாக நடக்கும். அர்ஜென்டினா மற்றும் போர்ச்சுகல் இரு அணிகளும் தங்களது பிரிவுகளில் 2-ஆம் இடம் பிடித்து நாக்-அவுட் சுற்றுக்கு வர வேண்டும். பின்னர், ‘ரவுண்ட் ஆஃப் 32’ போட்டியில் கடினமான எதிரணிகளை வீழ்த்தி வெற்றி பெற வேண்டும்.

இந்தச் சூழலில், அவர்கள் உலகக் கோப்பையின் ஆரம்ப நாக்-அவுட் சுற்றான ‘ரவுண்ட் ஆஃப் 16’ போட்டியிலேயே ஒருவரையொருவர் எதிர்கொள்ளும் சூழல் உருவாகும்.

3வது வழி என்னவென்றால், கால்பந்து ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கும் ஒரு சினிமா பாணி க்ளைமாக்ஸ் இதுவாகும். ஒரு அணி தனது பிரிவில் முதலிடமும், மற்றொரு அணி இரண்டாமிடமும் பிடித்தால் மட்டுமே இது சாத்தியம். இந்த முரண்பாடான நிலைகளால் இரு அணிகளும் நாக்-அவுட் அட்டவணையின் முற்றிலும் வெவ்வேறு எதிர் எதிர் முனைகளுக்குச் சென்றுவிடுவார்கள்.  அங்கிருந்து ‘ரவுண்ட் ஆஃப் 32’, ‘ரவுண்ட் ஆஃப் 16’, காலிறுதி மற்றும் அரையிறுதி என நான்கு நாக்-அவுட் போட்டிகளிலும் இரு அணிகளும் தோல்வியே அடையாமல் இறுதிவரை முன்னேற வேண்டும்.

அப்படி நடந்தால், ஜூலை 19 அன்று நடைபெறும் ஃபீஃபா உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் (Final) உலகக் கோப்பைக்காக மோதும் தங்களது வாழ்நாளின் ‘கடைசி நடனத்தை’ இந்த இரு உலக நாயகர்களும் ஆடுவார்கள்.

மெஸ்ஸி – ரொனால்டோ படைக்கும் சாதனைகள்:  மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ (மெக்சிகோ கோல்கீப்பர் கில்லர்மோ ஒச்சோவாவுடன் இணைந்து) வரலாற்றிலேயே 6 உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்கும் முதல் வீரர்கள் என்ற சாதனையைப் படைக்கின்றனர்.

உலகக் கோப்பையில் மெஸ்ஸி அதிக போட்டிகளில் (26 போட்டிகள்) விளையாடிய சாதனையை ஏற்கனவே வைத்துள்ளார். ரொனால்டோ 22 போட்டிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version