சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பணி ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக இரும்பு ஷெட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வடமாநிலத் தொழிலாளர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

சென்னை ராமாபுரம் பகுதியில் மெட்ரோ ரயில் பணிக்காக நூற்றுக்கணக்கான வடமாநில ஒப்பந்தத் தொழிலாளர்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த இரும்பு ஷெட்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு தொழிலாளர்கள் அனைவரும் அங்குள்ள ஒரு ஷெட்டில் அமர்ந்து, தொலைக்காட்சியில்  ஐபிஎல் இறுதிப் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக அந்த தற்காலிக குடியிருப்பின் இரும்பு மேற்கூரை பலத்த சப்தத்துடன் முற்றிலும் இடிந்து தொழிலாளர்கள் மீது கீழே விழுந்தது. இடிபாடுகளில் சிக்கித் தவித்த தொழிலாளர்களின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியினர் நந்தம்பாக்கம் போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களைப் பத்திரமாக மீட்டனர்.

இந்த விபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்து குறித்து நந்தம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version