விஜய் மீது உள்ள பொறாமையால் எதிர்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்வதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், கட்சியின் முதல் இடைத்தேர்தல் சவாலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் அமோக வெற்றி பெற்ற விஜய், பெரம்பூரைத் தக்கவைத்துக் கொண்டு, திருச்சி கிழக்கிலிருந்து ராஜினாமா செய்தார். இதனால் அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் போட்டியிடுவார் என ஊடகங்களில் தகவல்கள் பரவின. இந்நிலையில், ராகவா லாரன்ஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். அரசியலுக்கு வருவது குறித்து தனது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்ட அவர், ஜூன் 11-ம் தேதி முடிவை அறிவிக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால், மூத்த இயக்குநர் பாரதிராஜா அவர்கள் மறைவைத் தொடர்ந்து அறிவிப்பை ஒரு நாள் ஒத்திவைத்தார்.

ஜூன் 12-ம் தேதி சமூக ஊடகத்தில் வீடியோ வெளியிட்டு, அரசியலில் இறங்கலாமா என்பது குறித்து பொதுமக்களின் ஆலோசனையை நாடினார். இன்று நிருபர்களிடம் பேசிய ராகவா லாரன்ஸ், “நான் அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா என நீண்ட நேரம் யோசித்தேன். என்னை அழைத்த அனைவருக்கும் நன்றி. ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளேன். அதை விரைவில் அறிவிக்க உள்ளேன்” என்றார். மேலும், “என் ரசிகர்களை அழைத்து, என் தாயை மேடையேற்றி முக்கிய அறிவிப்பை வெளியிடத் திட்டமிட்டுள்ளேன்” எனக் கூறினார்.

புதிய அரசுக்கு போதிய கால அவகாசம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், ஒரு புதிய வீட்டிற்கு செல்லும் போது உரிமையாளர் சாவி கொடுத்து அனுப்புவார். உள்ளே சென்ற பிறகுதான் தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகள் தெரியவரும். அதுபோல், மக்கள் நம்பி ஒப்படைத்துள்ள புதிய அரசுக்கு அவகாசம் தர வேண்டும் என்றார். “புதிதாக ஒருவர் வந்தால் தெரு நாய்கள் குரைக்கும். சிலவற்றுக்கு பிஸ்கட், சிலவற்றுக்கு பிரியாணி கொடுத்து அடக்க வேண்டும். ஒரு நாய்க்கே இவ்வளவு என்றால், நாட்டை நிர்வகிப்பவருக்கு நிச்சயம் கால அவகாசம் கொடுக்க வேண்டும்” என்ற ராகவா லாரன்ஸின் ஒப்பீடு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு அரசியல் தரப்பினரும் இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எதிர்க்கட்சியினர் விஜய் மீது தொடுக்கும் விமர்சனங்கள் பொறாமையால் ஏற்பட்டவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தமிழக வெற்றிக் கழக அரசு பல சவால்களை எதிர்கொள்ளும் நிலையில், ராகவா லாரன்ஸின் முடிவு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அவரது அறிவிப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால், திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் மிகுந்த பரபரப்புடன் நடைபெறும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version