பல ஆண்டுகளுக்குப் பிறகு நீலகிரி மாவட்டம் உதகைக்கு வருகை தந்துள்ள நடிகர் ரஜினிகாந்தைக் காணக் காத்திருந்த ரசிகர்கள், அவருடன் புகைப்படம் எடுக்க முடியாததால் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து, ரேடிசன் புளு ஹோட்டலுக்குச் சொந்தமான வாடகை கார் ஒன்றில் தனியாக உதகைக்கு வந்தார். அங்கு, பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்குச் சொந்தமான ‘தி மொனார்க்’ (The Monarch) நட்சத்திர விடுதியில் அவர் தங்கியிருந்தார்.
ரஜினிகாந்த் உதகையில் தங்கியிருக்கும் தகவல் காட்டுத்தீ போலப் பரவியதை அடுத்து, இன்று அதிகாலை முதலே ஏராளமான ரசிகர்கள் அந்த நட்சத்திர விடுதியின் முன்பு குவியத் தொடங்கினர். தங்கள் அன்புக்குரிய தலைவருடன் ஒரு புகைப்படமாவது எடுத்துவிட வேண்டும் என அவர்கள் விடுதி மேலாளர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால் அங்கு சில மணி நேரம் சலசலப்பு நிலவியது.
ரசிகர்களின் கூட்டம் அதிகரித்த சூழலில், ரஜினிகாந்த் கர்நாடக மாநிலப் பதிவெண் (KA) கொண்ட இன்னோவா கார் மூலம் நட்சத்திர விடுதியிலிருந்து வெளியே வந்தார். ரஜினியின் காரைக் கண்டதும் உற்சாகமடைந்த ரசிகர்கள், புகைப்படங்கள் எடுக்க முண்டியடித்துக்கொண்டு காரின் குறுக்கே நின்றனர்.
கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால், காரை நிறுத்தாமல் உள்ளிருந்தபடியே ரசிகர்களைப் பார்த்து கையை அசைத்தவாறு ரஜினிகாந்த் புறப்பட்டுச் சென்றார். அப்போதும் விடாத சில ரசிகர்கள் அவரது காரின் பின்னாடியே ஓடினர். எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காகக் கார் நிறுத்தப்படாமல் அங்கிருந்து சென்றது.
நீண்ட நேரம் காத்திருந்தும் தங்கள் தலைவருடன் புகைப்படம் எடுக்க முடியாமல் போனதால், திரண்டிருந்த ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.
