ஆப்கானிஸ்தானில் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததில் 10 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர்.

கிழக்கு ஆப்கானிஸ்தானில் லக்மான் மாகாணத்தில், சமீபத்தில் நாடு திரும்பிய அகதிகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. சனிக்கிழமை அதிகாலை, லாரியின் ஓட்டுநர் தூங்கியதால், கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காயமடைந்த 36 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள நங்கர்ஹார் மாகாண மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாகிஸ்தானில் வசித்து வந்த சட்டவிரோத மற்றும் ஆவணங்களற்ற ஆப்கானிஸ்தான் அகதிகளை அந்நாட்டு அரசு கட்டாயமாக வெளியேற்றி வருகிறது. இதன் காரணமாக, சமீபகாலமாக லட்சக்கணக்கான ஆப்கானிஸ்தான் அகதிகள் பாகிஸ்தானில் இருந்து தங்களது சொந்த நாட்டிற்கு லாரிகள் மூலம் மூட்டை முடிச்சுகளுடன் திரும்பி வருகின்றனர். அப்படித் திரும்பிய ஒரு குடும்பத்தினரே இந்த கொடூர விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் முறையான சாலை பராமரிப்பு இல்லாததும், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றாததும் இது போன்ற தொடர் சாலை விபத்துகளுக்கு முதன்மைக் காரணமாக அமைகின்றன. தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் இந்த விபத்திற்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version