தான் சொல்லியிருந்தால் விஜய் வீடு தேடி வந்து, துணை முதலமைச்சர் பதவியே தந்திருப்பார் எனக் கூறியுள்ள தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக தற்போது ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
திமுக கூட்டணி மிகப்பெரிய கூட்டணி. ஆனாலும் தேர்தல் முடிவுகள் மாயைப்போல் மாறிவிட்டது.
ஒரு தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். மாற்றம் ஒன்றே மாறாதது.
தமிழ்நாட்டில் நாள்தோறும் நடைபெறும் நிகழ்வுகள் இளைஞர்கள், பெண்கள் என அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.
தவெக ஆட்சிக்கு வந்து வெகு சில நாட்களிலேயே தமிழகமும், தமிழக மக்களும் பல்வேறு துயரங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாம் மதச் சார்பற்ற வெற்றிக் கூட்டணியில் இருக்கிறோம். அதன் நிலை என்ன என்பது இன்று மக்களுக்கு தெரியும்.
இந்தக் கூட்டணியில் இருந்தவர்களின் ஆதரவைப் பெற்றுத்தான் ஆளும்கட்சி ஆட்சியைத் தொடர்கிறது.
தீய சக்தி என்று சொன்னவர்களின் ஆதரவோடுதான் தூய சக்தி எனச் சொன்னவர்கள் ஆட்சி அமைத்திருக்கிறார்கள்.
6 மாத காலம் ஒரு புது ஆட்சிக்கு, வாய்ப்பு தரவேண்டும் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. கேப்டன் சொன்னதை நாங்களும் பின்பற்றுகிறோம்.
இது ஹனிமூன் பீரியடும் இல்லை, ஹாலிடே பீரியடும் இல்லை; வாக்களித்த மக்கள் ஒவ்வொருவரும் அவதி பீரியடைத்தான் அனுபவித்து வருகிறார்கள்.
பாலியல் வன்கொடுமை, சட்டம் ஒழுங்கு பிரச்சினை, மேக தாது பிரச்சினை, மின்வெட்டு பிரச்சினை, பயிர்க்கடன் தள்ளுபடியில் திருப்தி இல்லாததால் விவசாயிகள் போராட்டம் என நடந்து கொண்டிருக்கிறது.
தேமுதிக குதிரைப் பேரத்தில் ஈடுபடுவதாக களங்கப்படுத்திய ஊடகங்களே, எந்தப் பேரத்துக்கும், பதவிக்கும், பணத்துக்கும், ஷோபா செட்டுக்கும் ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிகதான்.
கிடைத்தது ஒரு சீட்டு என்றாலும், கூட்டணி வைத்த கட்சிக்கு விசுவாசமாக இருப்பது தேமுதிக.
நான் நினைத்திருந்தால் விஜய்யை பார்த்திருக்க முடியாதா? அமைச்சருக்கு ஓடுறாங்க எல்லாம். நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், விஜய்யே வீடு தேடி வந்து துணை முதலமைச்சர் பதவியே கொடுத்திருப்பார். இதுதான் உண்மை.
ஆனால், இதுக்கெல்லாம் ஆசைப்படும் கட்சி அல்ல தேமுதிக. நாம் எடுத்துக் கொண்ட கூட்டணி, தேர்ந்தெடுத்தப் பாதைக்கு என்றென்றைக்கும் உண்மையாக இருப்போம்.
2024-இல் அதிமுகவுக்கு துணை நின்ற ஒரே கட்சி தேமுதிகதான். ஆனால் 2026 தேர்தலில் எங்களைத் தவிர்த்து மற்ற கட்சிகளை எல்லாம் அழைத்து பேசினார் எடப்பாடி பழனிசாமி.
கூட்டணியாகச் சேர்ந்து போராட்டங்களை நடத்தலாம் என ஆயிரம் முறை கூறியும் எடப்பாடி பழனிசாமி தேமுதிகவை கண்டு கொள்ளவில்லை.
நாங்கள் எம்.பி சீட்டுக்காக அதிமுகவை தாங்குவதாகச் சொல்கிறார்கள். நாங்கள் நினைத்தால் ஆயிரம் எம்.பி சீட்டுகளை வாங்க முடியும்.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மரியாதை இல்லாததால்தான் வெளியேறி திமுகவில் சேர்ந்தோம்.
தேமுதிகவை பாயிண்ட் பைவ் கட்சி எனவும், ஐசியூவில் இருக்கும் கட்சி எனவும் தேர்தல் பரப்புரையில் தொடர்ந்து சொன்னதால்தான், 2024 நாடாளுமன்ற தேர்தலில் 5 எம்.பிக்கள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் தருவதாக எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டு கொடுத்ததை காட்ட வேண்டியதாகியது.
அதிமுக கூட்டணியை விட்டு தேமுதிக வெளியேறக்கூடாது என எடப்பாடி பழனிசாமியை தவிர அத்தனை பேரும் உறுதியாக இருந்தனர்.
இன்று அதிமுகதான் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் இழந்து ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
