தற்போது இந்தியா முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மே மாதம் தொடங்கும் கத்திரி வெயிலால் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதே நண்பகல் நேரங்களில் மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வரும் சூழலில், வரும் அக்டோபர் மாதம் முதல் ‘சூப்பர் எல் நினோ’ (Super El Nino) எனும் அரிய மற்றும் சக்திவாய்ந்த வானிலை நிகழ்வு உருவாக வாய்ப்புள்ளதாகத் தனியார் வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடல் நீர் வெப்பநிலை வழக்கத்தை விட 2 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக உயர்வதையே இந்த ‘சூப்பர் எல் நினோ’ குறிக்கிறது.
வானிலை தரவுகளின்படி, கடந்த 1876-ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக வலுவான ஒரு சூப்பர் எல் நினோ நிகழ்வு வரும் அக்டோபரில் உருவாகக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் 2027-ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் எதிரொலிக்கும் என்றும், அந்த ஆண்டில் உலகின் சராசரி வெப்பநிலை 1.65 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அதீத வெப்பநிலை உயர்வால் 2027-ஆம் ஆண்டில் உலகம் இதுவரை கண்டிராத வெப்ப அலைகள், கடும் வறட்சி மற்றும் எதிர்பாராத பெருமழைப் பொழிவு போன்ற இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு இந்தியாவிலும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கடுமையான வறட்சி நிலவவும், வழக்கத்திற்கு மாறான அதீத வெப்பநிலை பதிவாகவும் வாய்ப்புகள் அதிகம். இதனால் நிலத்தடி நீர் மட்டம் வேகமாகக் குறைவதுடன், ஏரி, குளங்கள் போன்ற நீர்நிலைகளில் நீர் ஆவியாதல் அதிகரித்து கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடும். விவசாயம் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பெருமளவில் பாதிக்கக்கூடிய இந்த வானிலை மாற்றத்தை எதிர்கொள்ள இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என வலியுறுத்தப்படுகிறது.
