தவெக ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்தது தொடர்பான புகாரில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியையும், அவரது சகோதரர் அசோக்குமாரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் அதிமுக நிர்வாகியும் நாடார் பாதுகாப்பு பேரவைத் தலைவருமான சீனிவாசன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசை கவிழ்க்கும் நோக்கில் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசிய புகாரில் சென்னையை சேர்ந்த யூடியூபர் திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டார். அவர் அளித்த தகவலின் பேரில், கரூரை சேர்ந்த கார்த்திக், ரமேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அளித்த தகவலில் மேலும் இருவர் என ஐந்து பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதியின் பின்னணியில், திமுகவின் முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகியோரும் இருப்பது தெரியவந்துள்ளது.

கைதான நரேஷ் என்பவர், அசோக்குமாரை சென்னையில் நேரடியாக சந்தித்துப் பேசியதாகவும், செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் கொடுத்த அறிவுரையின் அடிப்படையிலேயே எம்.எல்.ஏ. இளையராஜாவுடன் தொடர்பு கொண்டு பேரம் பேசியதாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மீது ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் இந்த வழக்கில் மேலும் சில முக்கிய நபர்களை விசாரிக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆட்சிக் கவிழ்ப்பு சதி தொடர்பான புகாரின் பேரில் போலீசார் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோரைத் தேடிவருகின்றனர்.

இதனிடையே கைது செய்யப்பட்டவர்கள் அளித்த தகவலின் பேரில்,  ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டதாக அதிமுகவை பிரமுகரும் நாடார் பாதுகாப்பு பேரவைத் தலைவருமான சீனிவாசன் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

தவெக எம்எல்ஏ இளையராஜாவை மிரட்டியதாக கூறப்படும் IPDS திருநாவுக்கரசுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ள சீனிவாசன் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடையவர் ஆவார்.

இதன்மூலம் இந்த வழக்கில் 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டு அரசியலுக்கு புதிதான ஆட்சிக் கவிழ்ப்பு சதி அம்பலமாகியுள்ளது அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version