தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றி விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்திருக்கிறது. இதற்கு அடுத்து திமுக 59 தொகுதிகளையும், அதிமுக 47 தொகுதிகளையும் கைப்பற்றி இருக்கிறது. திமுக கூட்டணிக்கு 73 தொகுதிகளும், அதிமுக கூட்டணிக்கு 53 தொகுதிகளும் கிடைத்திருக்கிறது.
ஆயினும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தருமாறு தவெக அனுப்பிய தூதுக்கு காங்கிரஸ் கட்சி ஓகே சொல்லி, தனது 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவை தருவதாக கடிதம் அளித்துவிட்டது. இதன்மூலம் 10 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த காங்கிரஸ் – திமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்டிருக்கிறது.
காங்கிரஸ் ஆதரவு அளித்த பின்னரும், தவெக ஆட்சியமைக்க 6 எம்எல்ஏ-க்களின் தேவை இருக்கிறது. இதனிடையே விசிக நாளை விஜய்யின் கோரிக்கை தொடர்பாக பரிசீலனை செய்வதாக அறிவித்திருந்த நிலையில், அந்த ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

சிபிஎம் கட்சியும் தான் தவெகவுக்கு ஆதரவு தரப்போவதில்லை என தெரிவித்துள்ளது.

இந்த சூழலில் அதிமுகவில் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு அளிக்கப்போவதாகத் தகவல்கள் பரவியது.

இதனிடையே ஆளுநரை சந்தித்த விஜய், ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் அளித்துள்ளார். பதவி ஏற்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், ஆளுநர் தரப்பில் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க 2 நாட்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இப்படியான பரபரப்பான சூழலில், விஜய் ஆட்சிக்கட்டிலில் அமர்வதைத் தடுக்கும் வகையில் திமுக, அதிமுக இடையே ரகசியப் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும், அதிமுக ஆட்சி அமைக்க திமுக வெளியில் இருந்து ஆதரவு தருவதோடு, அதன் கூட்டணியில் உள்ள விசிக, தேமுதிக, இரண்டு கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் வழங்க வேண்டும் என டீல் பேசப்படுவதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் உலா வருகின்றன.

அதே நேரம் தவெகவுக்கு ஆதரவு அளிக்க எடப்பாடி சம்மதிக்காவிட்டால், அதிமுகவை உடைத்து தனது ஆதரவு எம்.எல்.ஏக்களோடு தவெகவுக்கு ஆதரவளிக்க சி.வி.சண்முகம் தரப்பு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக எம்.எல்.ஏக்களை புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைத்திருப்பதாகவும் மற்றுமொரு தகவல் பரவி வருகிறது.
ஏற்கனவே கூவத்தூரில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் தான் எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். இப்போது விஜய் முதலமைச்சராவதற்கும் அதிமுகவில் ஒரு தரப்பு இதனை கையில் எடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version