யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது தலைமையிலான தமிழக வெற்றி கழக (தவெக) அரசு, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த பிரபல யூடியூபர் மாரிதாஸ் இன்று காலை மதுரையில் அவரது இல்லத்தில் இருந்து கைது செய்யப்பட்டார். சென்னை சைபர் குற்றவியல் போலீசார் 10க்கும் மேற்பட்டோர் கொண்ட குழு அவரது வீட்டை சுற்றி வளைத்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. கைது செய்யப்பட்ட மாரிதாஸ் தற்போது சென்னை அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளார்.
மாரிதாஸ் தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோக்களில், முதல்வர் விஜய்யை “பொம்மை முதல்வர்” என விமர்சித்திருந்தார். மேலும், பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உறவினர் ஜான் பிரிட்டோ போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக அமலாக்கத் துறையால் (ED) சுட்டிக்காட்டப்பட்டதாகவும், அதில் 258 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டு பேசியிருந்தார். தமிழகத்தின் சிறு துறைமுகங்கள் தொடர்பான பொறுப்பு ஆதவ் அர்ஜூனாவிடம் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகள் அரசுக்கு எதிரான அவதூறு பிரச்சாரம் என தவெக தரப்பினர் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில், மாரிதாஸின் கைது நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், இந்தச் செயல் ஜனநாயகத்துக்கு எதிரானது எனக் கண்டிக்கப்பட்டுள்ளது. “கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் பாசிசப் போக்கு” என விமர்சித்த அதிமுக, “ஆட்சி மாறிவிட்டதா? ஆனால் காட்சிகள் மாறவில்லையே?” எனக் கேள்வி எழுப்பியது. முன்பு திமுக ஆட்சியின் போது பாசிசம், பாயாசம் என விமர்சித்தவர்கள் இப்போது அதே மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஏன் என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
பத்திரிகையாளர்களைச் சந்திக்க மறுப்பது, கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் பிளாக் அவுட் செய்வது, யூடியூப்பில் பேசினால் கைது செய்வது போன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கவை என அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. மாரிதாஸ் பேசியவை உண்மை அல்ல என்றால் அவதூறு வழக்கு தொடர்ந்து சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கலாம் அல்லது செய்தியாளர்கள் முன் விளக்கம் அளிக்கலாம் என அதிமுக சுட்டிக்காட்டியது. “நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு அழைக்காமல், அதிகாலையில் வீட்டை சுற்றி வளைத்து கைது செய்யும் அராஜகம் ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளது. மடியில் கனமிருப்பதால் இத்தகைய அச்சம் ஏற்பட்டிருக்கலாம் எனவும், ஜனநாயகக் குரல்களை நசுக்கும் இந்தப் போக்கு கடும் கண்டனத்துக்குரியது எனவும் அதிமுக வலியுறுத்தியுள்ளது.
மாரிதாஸ் மீதான நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் கருத்துச் சுதந்திரம், அரசின் பொறுப்பு, எதிர்காலத்தில் எதிர்க்கட்சிகளின் குரலை எப்படி கையாளப் போகிறது என்பது குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. யூடியூப் உள்ளிட்ட டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் அரசுக்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்தும் செயல்பாடுகளுக்கு இது முன்னுதாரணமாக அமையுமா என அரசியல் பார்வையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மாரிதாஸ் கைது தொடர்பாக தவெக தரப்பில் இதுவரை முறையான விளக்கம் வெளியாகவில்லை. இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் புதிய பரிமாணத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
