பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், இன்று சென்னை தி.நகரில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் கட்சியின் 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார். 2026-27ஆம் ஆண்டுக்கான இந்த அறிக்கை மொத்தம் ரூ.93,000 கோடி மதிப்புடையதாகும். இதில் ரூ.68,000 கோடி வேளாண்மைத் துறை வாயிலாகவும், பாசனத் திட்டங்களுக்காக ரூ.25,000 கோடி நீர்வளத் துறை வாயிலாகவும் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.
திமுக அரசின் 2025-26 நிதிநிலை அறிக்கையில் வேளாண்மைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.15,230.30 கோடியுடன் ஒப்பிடுகையில், பாமகவின் ஒதுக்கீடு 446 சதவீதம் அதிகம் என அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டினார். வேளாண் துறைக்கான ரூ.68,000 கோடியில் ரூ.13,000 கோடி உழவர்களுக்கான இடுபொருள் மானியத்திற்கும், ரூ.25,000 கோடி கட்டமைப்பு வசதிகள், வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கும், ரூ.30,000 கோடி பயிர்க் காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ்நாட்டின் மொத்த நிதிநிலை அறிக்கை மதிப்பில் 25 சதவீதம் வேளாண்மை மற்றும் தொடர்புடைய துறைகளுக்கு ஒதுக்க வேண்டும் என்பது பாமகவின் உறுதியான நிலைப்பாடு. நடப்பாண்டு ரூ.6 லட்சம் கோடி நிதிநிலை அறிக்கையில் ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், வேளாண்மை மற்றும் நீர்வளத்துக்கு ரூ.93,000 கோடியுடன், கால்நடை, பால்வளம், மீன்வளம், கூட்டுறவு, உணவு, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் வேளாண் சார்ந்த பணிகளுக்கு ரூ.57,000 கோடி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தினார்.
விவசாயிகளுக்கான சிறப்பு உதவிகள்: குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படாத சூழலில் ஏற்படும் கூடுதல் செலவை ஈடுகட்ட ஏக்கருக்கு ரூ.5,000 சிறப்பு மானியமும், நிலத்தடி நீர் இல்லாத பகுதிகளில் இழப்பை ஈடுகட்ட ஏக்கருக்கு ரூ.10,000 இழப்பீடும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடன் தள்ளுபடி மற்றும் மானியங்கள்: கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும். அரசே வெளிச் சந்தையில் கடன் வாங்கி வங்கிகளுக்கு செலுத்தும். பொதுத்துறை வங்கிகளில் சிறு-குறு விவசாயிகளின் ரூ.1 லட்சம் வரை கடனை அரசே ஏற்கும். கூட்டுறவு வங்கி குறுகியகால கடன்களுக்கு 10 சதவீத மானியம் வழங்கப்படும்.
தொழிலாளர்கள் மற்றும் கல்வி: வேளாண் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.24,000 உரிமைத் தொகை மூன்று தவணைகளில் வழங்கப்படும். உழவர்களின் வாரிசுகளுக்கு முதுநிலை பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி; தனியார் கல்லூரிகளுக்கும் அரசே கட்டணம் செலுத்தும்.
கொள்முதல் மற்றும் உற்பத்தி ஊக்குவிப்பு: நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்புக்கு டன்னுக்கு ரூ.5,000 என கொள்முதல் விலை உயர்த்தப்படும். தனி வாரியம் அமைக்கப்பட்டு 6,000 கொள்முதல் நிலையங்கள் ஏற்படுத்தப்படும். 38,866 பருவகாலப் பணியாளர்கள் நிரந்தரப்படுத்தப்படுவார்கள்; 12,000 புதிய பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். வேளாண் விளைபொருள்கள் சட்டம் 2026 இயற்றப்பட்டு அரசு கொள்முதலை கட்டாயமாக்கும். கிடங்குகள் 302-ல் இருந்து 1,000-ஆக உயர்த்தப்படும்.
அனைத்து வட்டங்களிலும் குளிர்ப்பதனக் கிடங்குகள், மாவட்டங்களில் உணவுப் பதனத் தொழிற்சாலைகள் அமைக்கப்படும். நெல் கொள்முதல் 70 லட்சம் டன்னாக உயர்த்தப்படும். துவரம்பருப்பு, எண்ணெய் வித்துக்கள் சாகுபடியை விரிவுபடுத்த ஏக்கருக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டுச் சர்க்கரை, நல்லெண்ணெய் உள்ளிட்டவை மானிய விலையில் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும். திமுக அரசால் நீர்ப்பாசனம் மற்றும் கொள்முதல் பணிகளை சரிவர மேற்கொள்ள முடியவில்லை என விமர்சித்த அன்புமணி, தமிழ்நாட்டில் தினசரி இரு விவசாயிகள் தற்கொலை செய்வதாகவும் சுட்டிக்காட்டினார்.
