தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுக்கும் நிலையில், பேச்சுவார்த்தைக்காக முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்லும் முடிவை கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கருகும் குறுவை பயிர்களைக் காப்பாற்ற காவிரியில் வினாடிக்கு 3500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடும்படி காவிரி மேலாண்மை ஆணையம் ஆணையிட்ட பிறகும் கூட தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக காங்கிரஸ் அரசு மறுக்கிறது; அங்குள்ள மக்களைத் தூண்டி விட்டு தமிழ்நாட்டுக்கு எதிராக போராட வைக்கிறது.
இவ்வளவுக்குப் பிறகும் கர்நாடகத்துக்கு சென்று அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருடன் பேச்சு நடத்தியே தீருவேன் என்று முதலமைச்சர் விஜய் அவர்கள் பிடிவாதம் பிடிப்பது தமிழகத்திற்கு நலனுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது.
காவிரி ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ள கன்னட அமைப்புகள் காவிரி பாயும் மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக எச்சரித்திருக்கின்றன. கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரும் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க ஆகஸ்ட் 2-ஆம் தேதி அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறார்.
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கக் கூடாது என்பதற்காகத் தான் கர்நாடக அரசும், கன்னட இயக்கங்களும் இத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீரைக் கூட தரக் கூடாது என்ற மனநிலையில் கர்நாடகம் இருக்கும் போது அங்கு சென்று பேச்சு நடத்தி முதலமைச்சர் விஜய் அவர்கள் எதை சாதிக்கப் போகிறார்? அவரது பயணத்தின் மூலம் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது. மாறாக மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள் தான் தாரைவார்க்கப்படும். இந்த தவறை முதலமைச்சர் விஜய் செய்யக் கூடாது.
காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்; மேகதாது அணை தடுக்கப்பட வேண்டும்; இவை தொடர்பாக கர்நாடக அரசுடன் எந்த பேச்சுகளையும் தமிழ்நாடு நடத்தக் கூடாது என்பது தான் தமிழக மக்களின் நிலைப்பாடு ஆகும். இதற்கு எதிராக எந்த முடிவையும் முதலமைச்சர் விஜய் மேற்கொள்ளக் கூடாது. எனவே, வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகம் செல்லும் முடிவை முதலமைச்சர் விஜய் அவர்கள் கைவிட வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.
