மத்திய உள்துறை அமைச்சரும், பாஜ மூத்த தலைவருமான அமித்ஷாவை அவரது வீட்டில் சந்தித்து பேசியுள்ளார் அண்ணாமலை.

தமிழக அரசியல் களத்தில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கே. அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக வெளியான தகவல்கள் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் அவரது இல்லத்தில் சந்தித்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பாஜகவின் தேசியத் தலைவரிடம் தனது விலகல் கடிதத்தை அண்ணாமலை சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது.

அமித் ஷா சந்திப்பின்போது, தமிழக பாஜகவுக்குள் நிலவும் உள்கட்சி பிரச்னைகள், தனக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு குறைகளை அவர் விரிவாக எடுத்துரைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு, அண்ணாமலையின் எதிர்கால அரசியல் பாதையைத் தீர்மானிக்கும் முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில் பல ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றிய அண்ணாமலை, 2011-ம் ஆண்டு ஐபிஎஸ் பயிற்சியை முடித்து காவல்துறையில் இணைந்தார். பெங்களூரு நகர துணை காவல் ஆணையராகப் பொறுப்பேற்றிருந்த அவர், பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வெற்றிகரமாகக் கையாண்டார். 2019-ம் ஆண்டு தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்து அரசியல் களத்துக்கு வந்த அண்ணாமலை, 2020-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.இணைந்த குறுகிய காலத்திலேயே கட்சியின் முன்னணி முகமாக உருவெடுத்த அண்ணாமலை, 2021-ம் ஆண்டு தமிழக பாஜக தலைவராகப் பொறுப்பேற்றார். மாநிலம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இளைஞர்கள் மற்றும் புதிய தலைமுறையினரிடையே பாஜகவின் செல்வாக்கை அதிகரிக்க முயற்சி எடுத்தார்.

அவரது தீவிர பிரசார பாணி மற்றும் நேரடி மக்கள் தொடர்பு மூலம் கட்சியின் ஆதரவு வட்டம் விரிவடைந்தது. 2025 வரை மாநிலத் தலைவராகப் பணியாற்றிய அவர், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அதிமுக-பாஜக கூட்டணி உருவானபோது தலைமைப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். தேர்தலில் போட்டியிடக் கட்சி வாய்ப்பு அளித்தபோதும் அதை ஏற்காத அண்ணாமலையின் முடிவு அப்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. தற்போது அவர் புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், அவரது அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதை அவரது ஆதரவாளர்களும், தமிழக அரசியல் பார்வையாளர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

அண்ணாமலையின் முடிவு தமிழக அரசியல் சமன்பாட்டை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் நிலவுகின்றன. அவரது தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் இளைஞர்கள் மத்தியில் உள்ள பிரபலத்தை கருத்தில் கொண்டு, அடுத்த சில நாட்களில் அவர் எடுக்கும் முடிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version