அண்ணாமலை பாஜவில் இருந்து விலக உள்ளதாக கூறப்படும் நிலையில், பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து பேசியுள்ளார்.
பாஜக தமிழக மாநிலத் தலைவர் பொறுப்புக்குப் பிறகு கட்சியில் எந்த முக்கியப் பொறுப்பும் வழங்கப்படாததால் அதிருப்தியில் இருந்து வரும் அண்ணாமலை, டெல்லியில் முக்கிய தலைவர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அவர் தனிக்கட்சி தொடங்கப் போவதாக பரவிய ஊகங்களுக்கு மத்தியில் இந்தச் சந்திப்புகள் தமிழக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நேற்று (ஜூன் 1) சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்ட அண்ணாமலை, அங்கு ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளார்.
இன்று காலை பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினை நீண்ட நேரம் சந்தித்து உரையாடினார். அப்போது தன்னுடைய கட்சிப் பதவியை ராஜினாமா செய்வதற்கான காரணங்களை விளக்கியதாக கூறப்படுகிறது. மேலும் தமிழக பாஜகவில் அண்மைக்காலமாக நடைபெற்ற நிகழ்வுகள் தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கான விளக்கங்களை அண்ணாமலை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு சற்று பொறுமையாக இருக்க நிதின் வலியுறுத்தியதாகவும், உரிய நேரத்தில் உரிய அங்கீகாரம் நிச்சயமாக அளிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளதாகவும், ஆனால் அதனை அண்ணாமலை ஏற்க மறுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. பின்னர் கட்சியின் மற்ற மூத்த தலைவர்களுடனும் அண்ணாமலை தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இருப்பினும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இதுவரை சந்திக்கவில்லை என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுவாரசியமாக, வழக்கமாக பாஜக கொடி பொருத்திய காரில் பயணம் செய்யும் அண்ணாமலை, சென்னை விமான நிலையத்துக்கு வந்தபோது தன் வாகனத்தில் கொடியைப் பொருத்தாமல் வந்தார். செய்தியாளர்கள் தனிக்கட்சி தொடங்கப் போகிறாரா என்று கேட்டதற்கு, “இரண்டு நாட்களில் அனைத்துக்கும் தெளிவான பதில் சொல்கிறேன்” என்று கூறி சென்றார். இன்று மாலை அவர் சென்னை திரும்பவுள்ள நிலையில், அவரது அடுத்த நகர்வு என்ன என்பதை அறிய அரசியல் வட்டாரங்கள் ஆவலுடன் காத்திருக்கின்றன.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெற்ற தோல்விக்குப் பிறகு அண்ணாமலையின் பங்கு குறித்து கட்சிக்குள் பல்வேறு கருத்துகள் எழுந்தன. அவருக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பது நீண்ட காலமாகவே பேசப்பட்டு வரும் விவகாரம். இந்நிலையில், அவர் தனிக்கட்சி தொடங்கும் திட்டத்தில் இருப்பதாக செய்திகள் வெளியான பின்னரே டெல்லி மேலிடம் அவரை அழைத்துப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், பாஜகவின் தேசியப் பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷுடனும் அண்ணாமலை தொடர்ந்து சந்திப்பு நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகள் சிலர் அண்ணாமலை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை பி.எல். சந்தோஷிடம் முன்வைத்திருந்த நிலையில், அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிப்பதுடன், கட்சியிலிருந்து விலகுவதற்கான காரணங்களையும் அண்ணாமலை தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது.
அண்ணாமலையின் இந்த டெல்லி பயணம் அவரது எதிர்கால அரசியல் பாதையைத் தீர்மானிக்கும் முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. அவர் பாஜகவிலேயே தொடர்ந்து உயர் பொறுப்புடன் நீடிப்பாரா அல்லது புதிய அரசியல் சக்தியை உருவாக்கி தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பாரா என்பது அடுத்த சில நாட்களில் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக பாஜகவினர் மற்றும் அரசியல் பார்வையாளர்களிடையே இந்த விவகாரம் தீவிர விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.
