சென்னையில் பிரபல நடிகர் ரவி மோகன் வீட்டில் பணிபுரிந்த பெண்களை, அவரது மகனுடன் சேர்த்து சட்டவிரோதமாகச் சிறைபிடித்து வைத்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, போலீஸார் அங்கு நேரில் சென்று விசாரணை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரவி மோகனின் இல்லம் சென்னை நீலாங்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு வேலைக்காகச் சென்ற இரண்டு பணிப்பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலைத் தொடர்ந்து, நீலாங்கரை காவல் நிலைய போலீஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது, அந்த வீட்டில் பணிப்பெண்கள் மற்றும் சிறுவன் ஒருவன் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வீட்டில் இருந்த சில பொருட்களை அவர்கள் திருடிவிட்டதாக நடிகர் ரவி மோகன் தரப்பில் சந்தேகம் கிளப்பப்பட்டது. அதன் காரணமாகவே, அவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக வீட்டில் தங்க வைத்திருந்ததாகக் கூறப்பட்டது.
இருப்பினும், சட்டம் ஒழுங்கைத் தன் கையில் எடுத்துக்கொண்டு இதுபோன்று யாரையும் தனிப்பட்ட முறையில் சிறைபிடித்து விசாரிக்கக் கூடாது என்று ரவி மோகன் தரப்பினருக்கு போலீஸார் கண்டிப்புடன் தெரிவித்தனர்.
மேலும், ஏதேனும் குற்றச்சாட்டுகள் இருந்தால் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளிக்குமாறும், சட்டப்படி அதனை போலீஸார் விசாரிப்பார்கள் என்றும் அறிவுறுத்தினர். இதையடுத்து அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் மீட்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து நீலாங்கரை போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
