சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27ம் தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தால் சிறப்பு தீவிர திருத்த பணிகள்(எஸ்ஐஆர்) நடைபெற்றது. இதையொட்டி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம்பெற்று இருந்தனர்.

இதில், சிறப்பு தீவிர திருத்த பணியின்போது உயிரிழந்த வாக்காளர்கள் 26,95,672 பேர், இடம் பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் 66,44,881 பேர், இரட்டை பதிவு வாக்காளர்கள் 3,98,278 பேர் என மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதனையடுத்து, வரைவு வாக்​காளர் பட்​டியல் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய கடந்த டிசம்பர் 19ம் தேதி முதல் பிப்ரவரி 10ம் தேதி வரை(நேற்று) காலஅவகாசம் வழங்கப்பட்டது. இதில் பெயர் சேர்க்க 17.10 லட்சம் பேரும், நீக்கம் செய்ய கோரி 1.84 லட்சம் பேரும், திருத்தம் கோரி 5.51 லட்சம் பேரும் என ஒட்டுமொத்தமாக 24.47 லட்சம் வாக்காளர்கள் அதற்குரிய படிவங்களை பூர்த்தி செய்து வழங்கியிருந்தனர்.

இணையதளம் வழியாக வாக்காளர் பெயர் சேர்க்க 5.74 லட்சம் பேர், நீக்கம் கோரி 15,935, திருத்தம் கோரி 4.38 லட்சம் என 10.28 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆக மொத்தம் 34 லட்சத்து 75 ஆயிரத்து 717 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பங்களை வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் சரி செய்யும் பணி நேற்றுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து வரும் 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23ம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய உச்சநீதிமன்றத்தால் WP(C) எண் 1072/ 2025 மற்றும் 1145/2025 ஆகிய வழக்குகளில் 29.01.2026 அன்று வழங்கப்பட்ட உத்தரவுகளின் அடிப்படையில், இந்தியத் தேர்தல் ஆணையமானது. 30.01.2026 அன்று வெளியிட்ட கடித எண் 23/ SIR/ 2026/ ERS -ல். “முரண்பாடுகள்” (Logical Discrepancies) என்ற பிரிவில் இடம்பெற்றுள்ள நபர்களின் பெயர் பட்டியலை கிராமப் பஞ்சாயத்து அலுவலகங்கள், பொது இடங்கள் மற்றும் தாலுக்கா/ துணை பிரிவு அலுவலகங்கள். நகரப் பகுதிகளில் உள்ள வார்டு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தியது.

மேலும், இம்முரண்பாடுகள் பிரிவில் பாதிக்கப்படக்கூடிய நபர்கள். முரண்பாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 10 நாட்களுக்குள். உரிய விளக்கத்துடன் தங்களது ஆவணங்களை / மறுப்புரைகளை நேரில் அல்லது தங்களது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி (வாக்குச்சாவடி முகவர்கள் உட்பட) மூலமாக சமர்ப்பிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் ஆணையம் அறிவுறுத்தியது.

இதற்கமைவாக. இந்திய உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி முரண்பாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டு, அடுத்த 10 நாட்களுக்குள் தொடர்புடைய நபர்கள் தங்களது ஆவணங்களை / மறுப்புரைகளை சமர்ப்பிக்க அனுமதிக்கப்பட்டனர். தற்போது. 01.01.2026-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision SIR) தொடர்பான இறுதி வாக்காளர் பட்டியல் 23.02.2026 அன்று வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version