திருச்செந்தூர்: அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடாக விளங்கும் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், கோவில் நிர்வாகம் திடீரென தரிசன நேரத்துக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொது தரிசனம், ரூ.100 கட்டண தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் சிறப்பு வரிசை ஆகியவற்றின் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி முருகப் பெருமானை தரிசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக பக்தர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், சண்முக விலாச மண்டபத்தை இரும்பு கிரில் கேட் அமைத்து முழுமையாக அடைத்து வைத்திருப்பது பக்தர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொது மற்றும் கட்டண வரிசையில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.
இதுவரை சாதாரண நாட்களில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை தரிசனத்துக்கு அனுமதித்து வந்த கோவில் நிர்வாகம், எந்த முன் அறிவிப்பும், பக்தர்களிடம் கருத்து கேட்பும் இன்றி திடீரென புதிய உத்தரவை அமல்படுத்தியுள்ளது. கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில், கட்டண தரிசனத்துக்கு மாலை 6.30 மணி வரையும், பொது தரிசனத்துக்கு இரவு 7 மணி வரையும் மட்டுமே அனுமதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேஷ தினங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் நேரம் மாறுபடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திடீர் நடவடிக்கை பக்தர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “பக்தர்களின் வசதியை கருத்தில் கொள்ளாமல், எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் தன்னிச்சையாக நிர்வாகம் செயல்படுவது வருத்தமளிக்கிறது” என பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கோவில் நிர்வாகம் உடனடியாக பக்தர்கள் நலன் கருதி உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். திருச்செந்தூர் கோவில் தமிழகத்தின் முக்கிய யாத்திரை தலங்களில் ஒன்று. கடல் அருகே அமைந்துள்ள இந்தக் கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். எனவே நிர்வாகம் பக்தர்கள் வசதிக்கு ஏற்ப கூடுதல் ஏற்பாடுகள் செய்ய வேண்டியது அவசியம் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
