தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் பதிவான வாக்கு 86 நாட்கள் எண்ணிக்கைக்கு பின் இன்று முழுமையாக முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
வழக்கறிஞர்கள் பி.எஸ். அமல்ராஜ், கே.பாலு, ஆர்.சி பால் கனகராஜ், எம்.வேல்முருகன், ஜி.மோகனகிருஷ்ணன், டி.பிரசன்ன உள்ளிட்ட 23 பேர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு 23 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல், கடந்த ஏப்ரல் 30 தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் நடைபெற்றது.
மொத்தமுள்ள 23 உறுப்பினர் பதவிகளுக்கு, குறைந்தது 5 பெண் வழக்கறிஞர்கள் உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டும்.
இந்த தேர்தலில் வழக்கறிஞர் மோகனகிருஷ்ணன், பால் கனகராஜ், வேல்முருகன், பாலு, சந்திரமோகன், அமல்ராஜ் உள்ளிட்ட 143 வழக்கறிஞர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.
தமிழகத்தில் 166 வாக்குச்சாவடி மையங்களும், புதுச்சேரியில் 2 மையங்களும் என மொத்தம் 168 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் 81 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
வாக்கு பெட்டிகள் அனைத்தும் சென்னையில் உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு மே முதல் வாரம் முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
முன்னுரிமை வாக்குகள் அடிப்படையில் முதலில் 3,001 வாக்குகள் பெறும் நபர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவர்கள். அந்த வகையில், 86 நாட்களாக நடந்து வந்த வாக்கு எண்ணிக்கை, இன்று நிறைவு பெற்றது.
வழக்கறிஞர்கள் பி.எஸ்.அமல்ராஜ், பரணிதரன், இ.பாலமுருகன், கார்த்திகேயன், ஐயப்பமணி, ஆர்.சி. பால் கனகராஜ், கிரிராஜன், கே.பாலு, எம்.வேல்முருகன், ஜி.மோகனகிருஷ்ணன், என்.விஜயராஜ் உள்ளிட்ட 18 ஆண் வழக்கறிஞர்கள், டி.பிரசன்னா, சுமதி உள்ளிட்ட 5 பெண் வழக்கறிஞர்கள் என 23 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யபட்டுள்ளனர்.
தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள், தலைவர், துணைத்தலைவரை தேர்வு செய்வர்.
