தமிழக டாஸ்மாக் துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஜூன் 30 ஆம் தேதியுடன் பழைய டாஸ்மாக் பார்களின் டெண்டர் காலம் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து, உரிய நெறிமுறைகள் மற்றும் புதிய வரைமுறைகளைப் பின்பற்றி, தனியார் பார்களுக்கான புதிய டெண்டர்கள் ஒதுக்கப்பட உள்ளன.
அதேபோல், டாஸ்மாக் நிர்வாகத்தை மேம்படுத்தும் நோக்கில், உயர் அதிகாரிகள் முதல் அடிமட்ட ஊழியர்கள் வரை விரைவில் பெரிய அளவில் பணியிட மாற்றங்களைச் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
மேலும், டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக 4 முக்கியத் திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன. பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையிலும், டாஸ்மாக் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலித்தும் இந்த திட்டங்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு, தொடர் சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
