கரூர் மாவட்டத்தில் திமுக ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் இருவரை சென்னை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவை வேறொரு கட்சிக்கு மாறுமாறு மிரட்டி, பேரம் பேசியதாக யூடியூபர் IPDS திருநாவுக்கரசு மீது புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை திருவல்லிக்கேணி போலீசார் இன்று அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் திருநாவுக்கரசு அளித்த முக்கிய தகவல்களின் அடிப்படையில், கரூரைச் சேர்ந்த இரு திமுக பிரமுகர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னையிலிருந்து சிறப்புப் படை போலீசார் கரூர் விரைந்து, கரூர்-ஈரோடு சாலையில் உள்ள கோதை நகர் பகுதியில் செயல்பட்டு வந்த ‘சக்தி மெஸ்’ உணவகத்துடன் தொடர்புடைய கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, செந்தில் பாலாஜியின் கரூர் தொடர்புடைய நிறுவனங்களுடன் அவர்கள் தொடர்பு வைத்திருந்ததாகவும், கார்த்திக் திமுக விளையாட்டு அணியின் துணைச் செயலாளராகப் பொறுப்பு வகிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. போலீசார் இவர்களது வீடுகளில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

சோதனையின் போது கணிசமான ரொக்கப் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள், மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. “சென்னை நகர போலீஸ்” என எழுதப்பட்ட வாகனங்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவர்களது இல்லங்களில் ஆவணங்கள், பொருட்கள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன.

இந்த சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக ஆட்சியை கவிழ்க்க சிலர் முயற்சி செய்து வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் நேற்று குறிப்பிட்டிருந்த நிலையில், இன்று செந்தில் பாலாஜியுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது கூடுதல் அரசியல் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தின்படி, கரூர் தொடர்புடைய இந்த இருவரும் தவெக எம்.எல்.ஏ.விடம் நேரடியாக பேரம் பேசியதாகக் கூறப்படுகிறது. எனினும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் எந்தெந்த பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டனர், சரியான குற்றச்சாட்டுகள் என்ன என்பது குறித்து போலீசார் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை.

விசாரணை நடைபெற்று வருவதால் விவரங்களை வெளியிட மறுக்கின்றனர். இந்த நடவடிக்கை தமிழ்நாடு அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெகவுக்கு எதிரான சதி முயற்சிகள் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், போலீசாரின் மேலும் விசாரணை முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. கரூர் கோதை நகர் பகுதியில் இன்று பதற்றமான சூழல் நிலவுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version