இந்தியாவின் பீர் உற்பத்தித் தொழில், நாட்டின் பொருளாதாரம், வேளாண்மை மற்றும் வேலைவாய்ப்பில் முக்கிய பங்காற்றி வருவதாகத் தொழில்துறை பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், புதிய முதலீடுகள் அதிகரித்து வருவதால், இத்துறை வேகமாக வளர்ச்சி பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்திய பிரூவர்ஸ் அசோசியேஷன் (Brewers Association of India) தலைமை இயக்குநர் வினோத் கிரி, தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசியபோது, கடந்த ஆறு மாதங்களில் புதிய பீர் ஆலைகளை அமைப்பதற்காக சுமார் ₹2,500 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) கையெழுத்தாகியுள்ளதாக தெரிவித்தார்.

ஆக்ஸ்ஃபோர்ட் எகனாமிக்ஸ் (Oxford Economics) மேற்கொண்ட சுயாதீன ஆய்வை மேற்கோள் காட்டிய அவர், இந்திய பீர் தொழில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (GDP) ஆண்டுக்கு சுமார் ₹92,000 கோடி பங்களிப்பதாகவும், மாநில அரசுகளுக்கு ₹51,000 கோடி வரி வருவாயை உருவாக்குவதாகவும் கூறினார். மேலும், இந்தத் துறையின் மூலம் சுமார் 13 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு கிடைப்பதாகவும் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, பார்லி மற்றும் அரிசி போன்ற மூலப்பொருட்களை இந்திய விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதன் மூலம் வேளாண் துறைக்கும், உற்பத்தி, போக்குவரத்து, சில்லறை விற்பனை, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கும் இந்தத் தொழில் ஆதரவாக இருப்பதாக அவர் கூறினார்.

இதனிடையே, யுனைடெட் பிரூவரீஸ் லிமிடெட் (UBL) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான விவேக் குப்தா, அந்த நிறுவனத்தின் மதிப்புச் சங்கிலி (Value Chain) மட்டும் இந்திய பொருளாதாரத்திற்கு சுமார் ₹43,000 கோடி பங்களிப்பதாகவும், 2.95 லட்சம் பேரின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், UBL நிறுவனம் ஆண்டுதோறும் இந்திய விவசாயிகளிடமிருந்து ₹700 கோடி மதிப்பிலான அரிசி மற்றும் பார்லியை கொள்முதல் செய்வதுடன், ₹7,000 கோடி மதிப்பிலான உள்நாட்டு கொள்முதலையும் மேற்கொள்கிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) உட்பட சுமார் 10,000 விற்பனையாளர்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

ஸ்டீவர்ட் ரெட்க்வீன் (Steward Redqueen) நிறுவனம் சுயாதீனமாக மேற்கொண்ட சமூக-பொருளாதார தாக்க ஆய்வின்படி, UBL நிறுவனம் தனது உற்பத்திக்குத் தேவையான உள்ளீடுகளில் 93 சதவீதத்தை இந்தியாவிலேயே கொள்முதல் செய்கிறது. இதன் மூலம் வேளாண்மை, பேக்கேஜிங், போக்குவரத்து, சில்லறை விற்பனை மற்றும் விருந்தோம்பல் துறைகளில் உள்ளூர் விநியோகச் சங்கிலி வலுப்பெறுவதுடன், கூடுதல் பொருளாதார நடவடிக்கைகளும் உருவாகின்றன.

மேலும், நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் விநியோகச் சங்கிலி இணைந்து இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 0.1 சதவீதம் அளவிற்கு பங்களிப்பதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலையான விவசாயம், நீர்வள மேலாண்மை மற்றும் சமூக மேம்பாட்டு முயற்சிகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள், விவசாயிகள், MSME நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு உற்பத்தித் துறைக்கு மேலும் பலன் அளிக்கும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version