தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் ஜூன் 4-ஆம் தேதி புதன்கிழமை அன்று திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக, 2026-2027 கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பில், 4 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 1-ஆம் தேதியும், 1 முதல் 3-ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 4-ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளி திறப்பு தேதியை மாற்றக் கோரி பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து அரசுக்குக் கோரிக்கைகள் வந்தன. வெவ்வேறு வகுப்புகளில் பிள்ளைகள் படிக்கும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தவிர்க்கவும், நிர்வாக வசதிக்காகவும் அனைத்து வகுப்புகளையும் ஒரே நாளில் திறக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், ஜூன் முதல் வாரத்தில் நிலவக்கூடிய பருவமழைக்கு முந்தைய வானிலை மாற்றங்கள், பரவலான மழைப்பொழிவு, ஈரப்பதம் மற்றும் வெப்பத்தின் தாக்கம் குறித்தும் அரசு ஆலோசித்தது. இதனுடன், பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாக மாணவர்களுக்கான குடிநீர் வசதி, சுகாதார வசதிகள், போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் பள்ளி வளாகத் தூய்மைப் பணிகள் போன்ற முன்னேற்பாடுகளை முழுமையாக நிறைவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அரசு ஆய்வு செய்தது.
இவை அனைத்தையும் கவனமாகப் பரிசீலித்த தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்துப் பள்ளிகளும் 1 முதல் 12-ஆம் வகுப்புகள் வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் வரும் ஜூன் 4 (புதன்கிழமை) அன்று பள்ளிகள் திறக்கப்படும்.
பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாக, மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யும் வகையில் அனைத்துத் தேவையான ஆயத்தப் பணிகளையும் முடிக்க வேண்டும் என்று அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றுன் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
