மத்திய அமைச்சரவையில் விரைவில் பெரிய அளவில் மாற்றங்கள் மற்றும் விரிவாக்கங்கள் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்துப் பேசினார்.
டெல்லியில் பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு, இந்தச் சந்திப்பு மிக நடைபெற்றது. மத்திய இணையமைச்சர்களாக இருந்த ஜார்ஜ் குரியன் மற்றும் ரவ்நீத் சிங் ஆகியோரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் ஜூன் 21-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இவர்களுக்கு மீண்டும் போட்டியிட பாஜக வாய்ப்பளிக்கவில்லை.
இதன் காரணமாக, சிறுபான்மையினர் விவகாரங்கள் மற்றும் மீன்வளத்துறை இணையமைச்சராக இருந்த ஜார்ஜ் குரியன் தனது பதவியை ஏற்கனவே ராஜினாமா செய்தார். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை இணையமைச்சராக உள்ள ஹர்ஷ் மல்ஹோத்ரா டெல்லி பாஜக தலைவராகவும், நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌதரி உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே நேரத்தில் சில அமைச்சர்கள் கட்சிப் பொறுப்புகளுக்கு மாற்றப்பட்டதாலும், சிலர் பதவிக் காலம் முடிந்து விலகியதாலும் மத்திய அமைச்சரவையில் புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தநிலையில், குடியரசுத்தலைவரை பிரதமர் மோடி சந்தித்து உள்ளது, அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
